Ponniyin Selvan 2 Audio Trailer Launch: கடந்த பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணி முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.


புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் கனவு திரைப்படமாக எடுத்தார். இதில், நடிகர் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்,  ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகி சுமார் 500 கோடி வசூலைக் குவித்தது. இந்த படத்தை வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்தனர். 


தொடர்ந்து இந்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில்,   இன்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்ற பாகத்தைப் போலவே பிரமாண்டமாக வெளியிட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் துரை முருகன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில், “ ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்க கூடிய அளவில் வெளியிட்டு இருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கதையை என்னுடைய கல்லூரி காலத்தில் 5 முறை படித்துள்ளேன். இந்த படத்தை சுபாஸ்கரன் எடுக்கப் போறேன் சொன்னப்ப இந்த கதையை படிச்சி இருக்கிங்களா என கேட்டேன்.


அதற்கு அவர் இல்லை, ஆனால் எடுக்கப் போறேன்னு சொன்னார். அப்புறம் நான் கதையை முழக்க அவரிடம் சொன்னேன். ஒவ்வொரு கேரக்டருக்கு யாரை போடப் போரிங்கன்னு கேட்டேன். ஒவ்வொரு பெயராக சுபாஸ்கரன் சொல்ல, நான் அரை மனதுடன் ஒப்புக் கொண்டேன். அப்புறம் இயக்குனர் யார் என கேட்டேன். மணி பெயரை சொன்னார். நான் அவர் சரியாக வருமா என கேட்டேன். ஆனால் படம் வெளியாகி பார்த்த போது பிரமித்து விட்டேன்.


மணியால் இப்படி கூட படம் எடுக்க முடியுமா என நினைத்து அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். எனக்கு வந்தியத்தேவன் கேரக்டர் மேல் பிரியம் அதிகம். காரணம் எனது தொகுதியில் இருக்கும் திருவலம் பகுதிதான் வந்தியத்தேவன் ஊரு. அதனால் எனக்கு பிடிக்கும். இங்க கமல் வந்திருக்காரு. அவருக்கு இணையனாவர் திரையுலகில் இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் இல்லை.


ஒரு படத்தின் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மன்னனை அறிமுக செய்த பெருமை சுபாஸ்கரனுக்கு கிடைத்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு வெற்றியை இரண்டாம் பாகம் பெறும்” என தெரிவித்தார்.