ஐஸ்வர்யா ராயுடன் காதல் காட்சியில் நடித்தது பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்களை பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


பொன்னியின் செல்வன்


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாவலை படித்தவர்களும் சரி, படிக்காதவர்களுக்கும் இந்த படம் புரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. 


பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


பொன்னியின் செல்வன் 2


இதற்கிடையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்  பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று ட்ரெய்லரை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். 


அவர் பேசும்போது, “பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு நன்றி. இந்த மேடையில் நான் நிற்க மணி ரத்னம் தான் காரணம். அவர் தயாரித்து நான் நடித்த “வானம் கொட்டட்டும்” படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு 4 முறை என்னை வந்து பார்த்தார். எனக்கு ஒன்னுமே புரியவில்லை. பின்பு தான் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என நினைத்து வந்து பார்த்தார் என புரிந்தது. 


சரத்குமாரிடம் டென்ஷனான மணிரத்னம் 


இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் காட்சி ஐஸ்வர்யா ராய் உடனான காதல் காட்சி.  முத்திரை மோதிரம் தொடர்பான காட்சியாக இடம் பெற்றிருக்கும். ஐஸ்வர்யாவின் கையை நான் பிடித்தால் என்ன நினைப்பார் என நினைத்து நடித்தேன். காட்சி சரியாக வரவில்லை. உடனே மணிரத்னம் என்னிடம் வந்து, உனக்கு ரொமான்ஸ் வராதா என கேட்டார். எனக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு.


நான் காதலித்து 2 முறை திருமணம் செய்தவன் என சொன்னார். ( உடனே அரங்கில் கரவொலி எழுந்தது). மேலும் உலக அழகி ஐஸ்வர்யா ராயை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்கு மட்டும் கொடுத்த மணி ரத்னத்துக்கு நன்றி.  ஒருவேளை பொன்னியின் செல்வனை 5 பாகங்களாக எடுத்தால் பெரிய பழுவேட்டரையர் காதலை சொல்லிருக்கலாம். 64 விழுப் புண்களைப் பெற்ற பெரிய பழுவேட்டரையர் 64 பெண்களை காதல் செய்து மணந்தாரா என்பதை படமாக எடுக்கலாம் என காமெடியாக சரத்குமார் சொன்னார்.