தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகர் விக்ரம். அவரின் படங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர் எடுக்கும் மெனக்கெடல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். அதுவே அவரின் வெற்றிக்கான ரகசியமாக பார்க்கப்படுகிறது. 


 


ஆதித்ய கரிகாலனாக பொன்னியின் செல்வன் படத்தில் கம்பீரமாக பார்த்து ரசித்த விக்ரம் பல கிலோ உடல் எடை குறைத்து, நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 




பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததுடன் ரிலீஸ் தேதியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'தங்கலான்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 27ம் தேதி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அவ்வப்போது ஏதாவது அப்டேட் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் 'தங்கலான்' படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு படக்குழுவினாரால் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் தெரிவித்து இருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன். 


 




அந்த வகையில் படக்குழுவினர் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 10ம் தேதி 'தங்கலான்' படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் பகிர்ந்துள்ள போஸ்டில் "தங்கத்திற்கான தேடலும், விடுதலைக்கான போரும் இரத்தக்களரியில் சந்திக்கின்றன" என பகிர்ந்துள்ளார். 


 






 



ரசிகர்களின் பல கால எதிர்பார்ப்பு படம் மீது இருக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.