அன்று காவிரி நீர் போராட்டத்தை கேலி செய்த ஆர் ஜே பாலாஜி..இன்று இளையராஜா! வெளுத்து வாங்கிய இடும்பாவனம் கார்த்திக்
கருப்பு படத்தில் இசைஞானி இளையராஜாவை கேலி செய்யும் விதமான காட்சிகளுக்காக இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை விமர்சித்த் இடும்பாவனம் கார்த்திக் பதிவிட்டுள்ளார்

கருப்பு திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை சட்டப்போராட்டத்தை விமர்சிக்கும் விதமான காட்சிகள் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமே இந்த காட்சியை வைத்ததாகவும் இளையராஜாவை புண்படுத்தும் நோக்கமில்லை என்றும் படக்குழு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட போதிலும் ஆர் ஜே பாலாஜி மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் காவிரி நதி நீர் போராட்டத்தை அவமதிக்கும் விதமாக ஆர் ஜே பாலாஜி கருத்து தெரிவித்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில ஆண்டுகளாக தான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமை தனக்கே சொந்தம் என சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். தன்னிடம் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்து வருகிறார். தான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமையை கோரும் இளையராஜாவை பலர் பணத்தாசை பிடித்தவர் என முத்திரை குத்தி வருகிறார்கள். அவரது சட்டப்போராட்டத்தை விமர்சிக்கவும் செய்கிறார்கள். சூர்யாவின் கருப்பு படத்தில் வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் அனுமதியின்றி தனது பாடல் பயண்படுத்தபட்டதற்காக இளையராஜா காப்புரிமை வழக்குத் தொடர்ந்ததாக ஒரு கேலி சித்தரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. இது இளையராஜா ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தவே படக்குழு தங்களது தவறுக்காக மன்னிப்புக் கேட்டனர்.
இடும்பாவனம் கார்த்திக் விமர்சனம்
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடும்பாவனம் கார்த்திக் காவிரி பிரச்சனையின் போதும் ஆர் ஜே பாலாஜி இதே போல் தவறான கருத்துக்களை பகிர்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பதிவில் அவர் "கருப்பு படத்தில் ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன். இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி போராட்டத்தை அவமானப்படுத்திய ஆர் ஜே பாலாஜி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வந்த நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன. உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை. நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















