தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், தனது படத்தை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைப்பதை விரும்பவில்லை என நானி தெரிவித்தார். இதற்கான காரணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.
பான் இந்திய வார்த்தை பயண்பாடு குறித்து நானி
“மேடம், உண்மையில் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் பான் இந்திய திரைப்படம் என்று அழைக்கும் போதெல்லாம், அதை அழைக்க வேண்டாம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், நான் அப்படிச் சொன்ன உடனே அதுவே ஒரு விவாதமாகிவிடுகிறது. ஒரு திரைப்படத்தை ‘பான் இந்திய’ என்று அழைக்கக் கூடாது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
தென் இந்திய படங்களுக்கு மட்டும் ஏன் ?
உதாரணமாக, ஒரு இந்தி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், அந்தப் படத்தை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைப்பதில்லை. அது தொடர்ந்து இந்தி திரைப்படமாகவே அழைக்கப்படுகிறது. ‘ஜவான்’, ‘பதான்’ போன்ற திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றபோதும், அவை பான் இந்திய திரைப்படங்கள் என்று அழைக்கப்படவில்லை. அவை இந்தி திரைப்படங்களாகவே இருக்கின்றன.
ஆனால், ஒரு தெலுங்கு திரைப்படம் வட இந்தியாவிலும் நாடு முழுவதும் வெற்றி பெற்றால், அதை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைக்கிறார்கள். அதேபோல், ஒரு தமிழ் அல்லது கன்னட திரைப்படம் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ‘பான் இந்திய’ என்ற வார்த்தை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. குறிப்பாக, தென்னிந்திய திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது? இந்தி திரைப்படங்களுக்கு ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?
என்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் நான் இதையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். என்னுடைய படத்தை பான் இந்திய திரைப்படம் என்று அழைக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். எல்லோரும் திரைப்படங்களை பான் இந்திய என்று அழைப்பதை என்னால் தடுக்க முடியாது. ஆனால், அந்த வார்த்தை எனக்கு அர்த்தமுள்ளதாக தெரியவில்லை.
என்னுடைய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள், இந்தி ரசிகர்கள், மலையாள ரசிகர்கள், கன்னட ரசிகர்கள் என அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இனிமேலும் இதுதான் என்னுடைய செயல்முறையாக இருக்கும். ஆனால், என்னுடைய திரைப்படங்களுக்கு அந்த பான் இந்திய அடையாளத்தை பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது விருப்பம். இருப்பினும், அந்த வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்படலாம். அதில் என்னால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. என்னால் அதை குறிப்பிடவோ, வேண்டுகோள் விடுக்கவோ மட்டுமே முடியும்” என்றார்.
