தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் தொடங்கிவிட்டார். அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 



 


நகைச்சுவை மட்டுமே தாரக மந்திரம் :


சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முக்கியமான காரணம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார் படத்தின் இயக்குநர் சுராஜ். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் சுவாரஸ்யமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்.


படத்தின் ஒன் அண்ட் ஒன்லி ஹீரோ வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ். அண்ணன் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னததும் என்னிடம் சொன்ன ஒரே விஷயம் என்னுடைய ரீ என்ட்ரி வேற லெவெலில் இருக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக இருக்க வேண்டும். இதில் அடிதடி, ஆக்சன் காட்சிகளோ அல்லது வேறு ஏதாவது  காட்சிகளோ இருக்க கூடாது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் சிரிக்க மறந்து விட்டனர். அதனால் அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது" என்றார் . 






தடங்கல்களை தாண்டியும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் : 


மேலும் அவர் கூறுகையில் "இந்த திரைப்படத்தை கொரோனா காலகட்டத்தில் நாங்கள் தொடங்கியது முதல் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. ரிலீஸ் சமயத்திலும் அது நீடிக்கிறது. இவரின் என்ட்ரி மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் பலர் இவரின் என்ட்ரியை தடுக்க வேண்டும் என ஏதேதோ செய்கிறார்கள். இது நல்லா இருக்காது, மறுபடியும் அவர் வந்து என்ன செய்ய போகிறார், என்ன இருக்க போகுது அது இது என ஏகப்பட்டதை சொல்லி படத்தை தடுப்பதற்காகவே முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் பப்ளிக் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் எங்களை கொண்டாடுகிறார்கள், படத்தின் ரிலீஸ்க்காக ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஏரளமான கன்டென்ட் இருக்கு.


குறிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மீம்ஸ்களை அள்ளிக் கொடுத்துள்ளோம். வடிவேலு ரசிகர்களுக்கு ஏராளமான பஞ்ச் டயலாக்களை வாரி கொடுத்துள்ளோம். மொத்தத்தில் இப்படம் ஒரு முழு நீள காமெடி என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை" என்றார் இயக்குனர் சுராஜ். 


இன்னிக்கு வருது நாளைக்கு வருது என பல ரிலீஸ் தேதிகளை அறிவித்து கடைசியாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கம்பீரமாக டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகி விட்டது. நாளுக்கு நாள் படம் குறித்த எதிர்பார்ப்பு நகர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.