இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரின் கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒவ்வொரு முறை அவரின் பாடல்களை கேட்கும் போதேல்லாம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். காலங்கள் கடந்தும் அவரின் தனித்துவமான வார்த்தைகளால் நெஞ்சங்களில் நீங்காமல் அன்று போலவே இன்றும் என்றும் நிலைத்து இருப்பார். 


நா.முத்துக்குமார் எனும் மந்திரம்:


நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் , யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் ஒன்றாக இணையும் போது அந்த பாடல் ஒரு மேஜிக் கிரியேட் செய்யும் என்பதை யாரையும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் மிகவும் அழுத்தமானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அவரின் பாடல் வரிகளுக்கு ஒரு முறை சென்சார் போர்டு தடை விதித்து அதை மாற்ற சொல்லி உத்தரவிட்டுள்ளது. 


 



காதலிக்கும் புத்தன்:


படங்களில் தான் ஆங்காங்கே காட்சிகளை வெட்டிவிடும் சென்சார் போர்டு என்று பார்த்தால் பாடல் வரிகளுக்கு கூட சென்சார் போர்டு வார்த்தைகளை மாற்ற சொல்லும் என்பது இந்த சம்பவத்திற்கு பிறகு தான் தெரிய வந்தது. அப்படி நா. முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு வெட்டு போடப்பட்டது மாதவன், ஜோதிகா நடிப்பில் கார்த்திக் ராஜாவின் இசையில் வெளியான 'டும் டும் டும்' படத்தில் இடம்பெற்ற 'அத்தான் வருவாக...' பாடலில் தான். அந்த பாடலில் 'புத்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே, போதி மர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே' என்ற வரிகள் இடம்பெற்று இருந்தன. புத்தரை அவமதிப்பது போல இருந்த அந்த வரிகளை மாற்ற சொல்லி சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அதனால் அந்த இடத்தில் புத்தனை சித்தனாகவும், போதி மரத்தை ஆலமரமாகவும் மாற்றி 'சித்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே, ஆலமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே” என மாற்றிவிட்டார். 


வார்த்தை ஜால வித்தகன் புத்தன்:


என்னடா இது ஆசை ஆசையாக எழுதிய வரிகளை இப்படி மாற்ற சொல்லி விட்டார்களே என மிகுந்த வருத்தத்தில் இருந்த நா. முத்துக்குமார் அதே புத்தர் அதே போதி மரத்தை வைத்து மீண்டும் ஒரு முறை வரிகளை எழுதி இருந்தார். நடிகர் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் 'அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு...' பாடலில் 'காதல் வந்து நுழைந்தால் போதி மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்' என அதே ஸ்டைலில் புத்தரை வைத்து வரிகளை எழுதி இருந்தார்.


ஆனால் அந்த சமயத்தில் பாடல்களுக்கு எல்லாம் சென்சார் தேவையில்லை என நினைத்து அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி நா. முத்துக்குமார் டும் டும் டும் படத்தில் மிஸ் செய்ததை சாமி படத்தில் கேட்ச் பிடித்து சிக்ஸர் அடித்து விட்டார். இந்த செய்தி நா. முத்துக்குமாரின் ரசிகர்களுக்கு மிகவும்  ஸ்வாரஸ்யமான விஷயமாக இருந்தது. ஒரு கவிஞனால் தன்னுடைய வார்த்தைகளை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க முடியாது என்பதற்கு நா. முத்துக்குமார் கொடுத்த இந்த டக் லைஃப்  சூப்பராக இருந்தது.