நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 


விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. மதன் கார்க்கி எழுதிய அந்த பாடலை விஜய் பாடியிருந்தார். இதன் வரிகள் எல்லாம் விஜய்யின் அரசியல் வருகையை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. 


இப்பாடல் தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யுவனிடம் இருந்து இப்படி ஒரு இசையை எதிர்பார்க்கவே இல்லை என சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஒரு வீடியோவில் பேசிய யுவன் தனக்கு குத்துப்பாட்டுக்கு இசையமைப்பது பெரும் தலைவலி என தெரிவித்துள்ளார். 






அந்த வீடியோவில், “இசையமைப்பதில் எனக்கு கடினமாக இருப்பது எது என்று கேட்டால் திடீரென இயக்குநர்கள் குத்துப்பாட்டு கேட்பது தான். நான் இன்னிக்கு செத்தேன் என நினைத்துக் கொள்வேன். ஏனென்றால் இசையில் நிறைய வகைகள் உள்ளது. ஆனால் குத்து பாடலில் யோசிக்க எதுவுமே கிடையாது. சந்தமே கொஞ்சம் தான் உள்ளது. அதுல யோசிக்கிறது என்பது ரொம்ப பெரிய தலைவலியான விஷயம்” என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்திருப்பார். 


இதனைத் தொடர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன், ‘எந்த இயக்குநராவது யுவனிடம் குத்து பாட்டு வேண்டும் என கேட்டால், யுவனின் எண்ணமெல்லாம் அந்த இயக்குநரை போட்டு குத்த வேண்டும் என்பது போல இருக்கும்’ என கிண்டலாக தெரிவித்திருப்பார். இந்த வீடியோவை பார்க்கும்போது யுவனுக்கு குத்துப்பாடல் என்றாலே அலர்ஜி தான் போல.. அதனால் தான் விசில் போடு பாடல் இப்படி இருக்கிறதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


The Greatest of All Time


the greatest of all time படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், யோகிபாபு, அஜ்மல் அமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.