முதலமைச்சர் முக ஸ்டாலின் முதல் ரஜினிகாந்த் வரை திருமதி பத்மாவை பாராட்டியவர்கள் அவரது பணி உடையில் வரவழைத்து சந்தித்ததை பலரும் விமர்சித்து வந்த நிலையில் இதுகுறித்து பத்மா மற்றும் அவரது கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

Continues below advertisement

சென்னை தி நகரில் தெருவில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளார். அவரது செயலை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை தனது வீட்டிற்கு வரவழைத்து திருமதி பத்மாவுக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார். இயக்குநர் பார்த்திபம் பத்மா அவர்களை சென்னை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்துச் சென்று மாணவர்கள் முன்பு அவரை கெளரவப்படுத்தினார். 

ஏன் பணி உடையில் அழைத்து செல்ல வேண்டும் 

ஒருபக்கம் திருமதி பத்மா அவர்களின் செயலை பலர் பாராட்டினாலும் ஏன் அவரை எல்லாரும் பணி உடையில் மட்டுமே வரவழைத்து கெளரவிக்கிறார்கள் என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி ரஜினியை நேரடியாக விமர்சித்தே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். "துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் ரஜினிகாந்த் அவர்களே.. உங்கள் பெருதன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே.." என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Continues below advertisement

இந்த உடை தான் என் அடையாளம் 

இந்த சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வந்த நிலையில் தற்போது திருமதி பத்மா தனது கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் " நேற்று இயக்குநர் பார்த்திபன் திடீரென்று எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சொன்னார். அவர் புடவை ஒன்றை வாங்கிவந்து அதை கட்டிக்கொண்டு வரச் சொன்னார். ஆனால் நாங்கள் தான் இந்த உடைதான் அவருக்கு அடையாளம் அதனால் இதில் தான் அவர் வருவார் என்று சொன்னோம். எத்திராஜ் பெண்கள் கல்லூரிக்கு பார்த்திபன் சார் எங்களை அழைத்துச் சென்றார். அவர்கள் யாருக்குமே எங்களை தெரியாது ஆனால் எங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள். நாங்கள் தான் இந்த சீருடையை அணிந்து வருவோம் என்று சொன்னோம். இந்த உடையில்தான் எங்களுக்கு அடையாளம் கிடைத்தது. அதனால் பொது நிகழ்ச்சிக்கு இந்த உடையில் செல்கிறோம்." என்று பத்மா மற்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்கள்.