தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக உலா வருபவர்  சத்யராஜ். இவரது மகள் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜ் தனது திரையுலக தொடக்க காலம் முதல் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவராக திகழ்ந்து வருகிறார். இவரது மகள் திவ்யா சத்யராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.

Continues below advertisement

 விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகள்:

இந்த நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திவ்யா சத்யராஜ் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.  அந்த நிகழ்ச்சியில் திவ்யா சத்யராஜ் பேசியதாவது, நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். உதயநிதி ஸ்டாலின் ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு சொகுசு விமானத்துல ஃப்ரண்டு கூட, ஃப்ரண்டு கல்யாணத்துக்கு  போற ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. 

அவர் ஒரு கடினமாக உழைக்கக்கூடிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொள்கைகளின் நாயகன். மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வாரு. பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன். அவரை எதிர்த்து யாரு எங்க நின்னாலும் டெபாசிட் போய்விடும். உதயநிதி ஸ்டாலின் ஒரு வீழ்த்த முடியாத நாயகன். 

இவ்வாறு அவர் பேசினார்.

10 சதவீதம் மரியாதை கூட கிடைக்காது:

இந்த நிலையில் திவ்யா சத்யராஜின் பேச்சுக்கு தவெக தொண்டர்களும், விஜய் ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பிரபல திரைப்பட விமர்சகரும், நடிகருமான பிரசாந்த் திவ்யா சத்யராஜிற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, இவங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? சத்யராஜ் சார் இல்லைனா உங்களுக்கு கிடைக்குற மரியாதைல 10 சதவீதம் கூட எங்கயும் கிடைக்காது அக்கா. நாம எதுக்கு விஜய் அண்ணனை பத்தி பேசனும்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

சூடுபிடிக்கும் தமிழக அரசியல்:

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக-வே தங்களது பிரதான அரசியல் எதிரி என்று தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்றும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், நடிகர் விஜய் தீவிர அரசியலை இந்தாண்டு முதல் கையில் எடுத்துள்ளார். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகனின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் தீவிரமாக உள்ளார்.