முதியோர் இல்லத்தில் வசித்து வருவதாகவும், மருந்து, மாத்திரைகள் வாங்கக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் நடிகர் மோகன் சர்மா தெரிவித்ததாக வெளியான தகவல்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தன. அவருக்கு உதவ வேண்டும் என பலரும் குரல் கொடுத்த நிலையில், தற்போது நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ள சில தகவல்கள் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மோகன் சர்மா உண்மையிலேயே ஆதரவற்ற நிலையில் இருக்கிறாரா அல்லது அவரது சொத்து மற்றும் பண விவகாரங்களின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Continues below advertisement

யார் இந்த மோகன் சர்மா

170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், பல்வேறு விருதுகளை வென்றவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர் நடிகர் மோகன் சர்மா. நடிகை லக்ஷ்மியின் முன்னாள் கணவரான இவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். ஒரு காலத்தில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படும் மோகன் சர்மா, தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருவதாக வெளியான தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

மருந்து, மாத்திரைகள் வாங்கக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும், உடல்நலப் பிரச்சினைகளால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் மோகன் சர்மா பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதைப் பார்த்த பலரும் அவருக்கு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ள சில தகவல்கள் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Continues below advertisement

ஃபிலிம் சேம்பர் உதவவில்லை என்பது உண்மையல்ல

மோகன் சர்மா, திரைப்பட வர்த்தக சபை தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, கடந்த ஆண்டே திரைப்பட வர்த்தக சபை சார்பில் மோகன் சர்மாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ரசீதில் அவரே கையெழுத்திட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மோகன் சர்மா கஷ்டப்படுவதாக தகவல் வெளியானபோது நடிகர் கார்த்தியின் ஏற்பாட்டில், நடிகர் சங்கம் சார்பிலும் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். இதனால், அவருக்கு யாருமே உதவவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

போயஸ் கார்டன் வீடு குறித்து 

மோகன் சர்மா தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனில் இருந்த வீட்டை விற்றுவிட்டதாக கூறியிருந்தார். ஆனால் அந்த வீட்டின் பின்னணி குறித்து குட்டி பத்மினி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகை லக்ஷ்மி, அந்த வீட்டை வாங்குவதற்காக மோகன் சர்மாவிடம் ரூ.5.5 லட்சம் கொடுத்ததாகவும், பின்னர் அந்த சொத்து அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். மேலும், அந்த வீட்டை பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதாகவும், அதனைச் சுற்றி கடன் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோகன் சர்மா ஒரு திறமையான நடிகர் என்பதை தான் மறுக்கவில்லை எனக் கூறியுள்ள குட்டி பத்மினி, அவர் பேசும் விதம் மக்களிடம் உணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.