Actor Mohanlal: நாட்டின் மிக உயர்ந்த சினிமா விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023-ம் ஆண்டிற்கு நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.
மோகன்லாலுக்கு கெளரவம்:
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் மோகன்லால். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ’மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவரது முதல் படமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. 1983 ஆம் ஆண்டில் 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அங்கிருந்து, ஒரு நடிகராக மோகன்லாலின் பயணம் தொடங்கியது. அந்த வகையில் இதுவரை இவர் 400 படங்களுக்கும் மேல் பணியாற்றியிருக்கிறார். இதுவரை ஐந்து தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இச்சூழலில் தான் இவரை மத்திய அரசு கெளரவிக்கும் விதத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தாதாசாகேப் பால்கே விருது:
அதாவது, மோகன்லாலுக்கு நாட்டின் மிக உயர்ந்த சினிமா விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், திரு. மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது! புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார். அவரது ஒப்பற்ற திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு தங்கத் தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.”என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாதாசாகேப் பால்கே விருதை பெற உள்ள மோகன்லாலுவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஸ்ரீ மோகன்லால் ஜி சிறந்து விளங்குவதற்கும், பல்துறைத்திறனுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறையில் முன்னணியில் இருப்பவர், கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்.
பல்வேறு ஊடகங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.” என்று கூறியுள்ளார். மோகன்லாகுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.