திரைத்துறையை சேர்ந்த பெண்கள் பலரும் அவர்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை மினு முனீர் மாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு ஒன்றை தன்னுடைய முகநூல் மூலம் போஸ்ட் செய்துள்ளார். 




முகேஷ், மணியன் பிள்ளா ராஜு, இடவேல பாபு, ஜெயசூர்யா, ஆடவ் சந்திரசேகரன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் நொபிள் மற்றும் விச்சு ஆகியோரால் நான் அனுபவித்த தொடர்ச்சியாக உடல் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய புகாரில் 2013ம் ஆண்டு நாங்கள் ஒரு திட்டத்தில் இணைந்து பணியாற்றியபோது இந்த நபர்களால் உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு ஆளானபோதும் ஒத்துழைத்து தொடர்ந்து வேலை செய்த முயற்சித்த போதும் என்னால் அவர்களின் துஷ்பிரயோகத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் மலையாள திரையுலகையே விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் மாறி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.


துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஒரு நாளிதழில் கூட பேசி இருந்தேன். அவர்களால் நான் அனுபவித்த மோசமான செயல்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்கள் உதவியை நான் கேட்டுக்கொள்கிறேன்" என போஸ்ட் செய்து இருந்தார். 


மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினராவதற்கு முயற்சி செய்த  போது நடிகர் முகேஷ் உடனான வேதனையான அனுபவத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து இருந்தார். "அம்மாவில் நான் உறுப்பினராக சேர ஆறு படங்களில் பணிபுரிந்தேன். நான் அம்மாவில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் அவர்களுக்கு பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என முகேஷ் கூறினார்” என குற்றம்சாட்டுகிறார் நடிகை மினு முனீர்.


அவரின் இந்த புகார் மலையாள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.