Mansoor Ali Khan About Trisha: நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சக நடிகர்களை தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

 

கடந்த 19ம் தேதி வெளியான லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் இடம்பெறவில்லை என்றும், பெண்களுக்கு எதிராக செயல்படும் வில்லன் கேரக்டரை தனக்கு தரவில்லை என்றும், 150க்கும் மேற்பட்ட படங்களில் பெண்களுக்கு எதிராகவே நடித்ததாகவும் கூறியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இது குறித்து த்ரிஷா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ‘ நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கத்தக்க விதமாக உள்ளது. அவரது பேச்சில் பாலியல், ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்போக்கு உள்ளது. தனது எஞ்சிய சினிமா வாழ்க்கையில் இது போன்ற ஒரு நடிகருடன் நடிக்க மாட்டேன். இது போன்ற நடிகர் சமூகத்திற்கு இழுக்கானவர்” என்று காட்டமாக கூறியிருந்தார். 

 

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருப்பதை பார்த்த லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ மன்சூர் அலிகானின் பேச்சு தனக்கு வருத்தத்தையும், கோப்பத்தையும் அளிக்கிறது. தன்னுடன் பணிபுரியும் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். பெண்களை இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது” என கூறியுள்ளார். அதேநேரம், த்ரிஷாவின் கோபத்திற்கு பதிலளித்துள்ள மன்சூர் அலிகான், லியோ படம் குறித்து தான் நகைச்சுவையாக பேசியதை வேண்டுமென எடிட் செய்து சிலர் பரப்பி வருவதாகவும், அதை பார்த்து த்ரிஷா கோபமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் உலகத்தில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, இதெல்லாம் தேவையா என்ற பாணியிலும் மன்சூர் அலிகானின் பதில் இருந்தது. 

 

இந்த நிலையில் மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம்  வெளியிட்ட  அறிக்கையில்,” மூத்த நடிகர் திரு.மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.  தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும். சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய திரு. மன்சூர் அலிகான் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது.  ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.


மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.  இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய  நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். 

 

இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது, வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதில் சோகமும் கோபமும், இத்துறை சார்ந்தவர்களே அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது” என நடிகர் சங்கம் கூறியுள்ளது.