தற்போது ‘மண்டாடி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சுஹாஸ் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது கடந்தகால அனுபவம் குறித்து இயக்குநர் பகிர்ந்துகொண்ட தகவல் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சுஹாஸ் நடித்த சாட்டாப்புலி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படக்குழு வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியது.
நிறத்தால் அவமானப்படுத்தபப்ட்ட சுஹாஸ்
இந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமாறன் புகழேந்தி, படப்பிடிப்பின்போது சுஹாஸ் தன்னிடம் மனவருத்தத்துடன் பேசியதாக தெரிவித்தார். “ஷூட்டிங்கில் இருக்கும்போது சுஹாஸ் சார் ரொம்ப ஃபீல் பண்ணி பேசுவார். ‘சார், நான் கருப்பா இருக்கிறதால ஊரில் வந்து நான்லாம் ஒரு ஆளா வருவேனா?’ என்று கேட்பார்கள். அப்படியெல்லாம் ரேசிஸ்ட் கமெண்ட்ஸ் சொல்கிறார்கள் என்று ஃபீல் பண்ணுவார். அப்போது நான், ‘நம்ம படம் ஜெயிக்கும் சார். அப்போது ஸ்டேஜில் நான் பதில் சொல்வேன் சார்’ என்று சொன்னேன்.
கருப்பு பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்
கருப்பாக இருப்பவர்கள் மேலே வர முடியாது என்று சொன்னவர்கள் யாரென்று தெரியுமா? உங்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். கருப்பைப் பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள். அதெல்லாம் இங்கே இல்லை. நீங்கள் வந்து படம் பார்த்துவிட்டு திரும்பவும் கூப்பிடவில்லை என்றால், நாங்களே அவரைப் பிடித்து உட்கார வைத்திருப்போம். இன்னிக்கு ஒவ்வொரு வீட்டிலும் அவரைத் தெரியும். எங்களுக்கு வந்து சாட்டாப்புலி மட்டுமல்ல, எமோஷன். உங்களுக்கு பிராமிஸ் பண்ணேன். அதை பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். ரொம்ப நன்றி” என்று மதிமாறன் புகழேந்தி பேசினார்.
தமிழ் சினிமாவில் தனது முதல் முக்கியமான வரவேற்பை ‘மண்டாடி’ மூலம் பெற்றுள்ள சுஹாஸுக்கு, இந்த வெற்றி முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. தெலுங்கில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் கவனம் பெற்றவர். தற்போது தமிழில் கிடைத்துள்ள வரவேற்பு அவரது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் பகிர்ந்த சுஹாஸ் குறித்த இந்த தகவலும் பேசுபொருளாகியுள்ளது.
