Surya Jai Bhim Case: ஜெய்பீம் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

 ‘ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், குறிப்பிட்ட சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் காட்சிகள் இருந்ததாக கூறி, ஜெய்ம்பீம் படத்தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். 

 

இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட  சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Continues below advertisement