துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

 

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர். தான் பாராட்ட விரும்பும் ஒன்றை பற்றி உடனடியாக பதிவுகளை வெளியிடுவது வழக்கம். மேலும் வாழ்த்து, திரைப்பட பாடல் உருவாக்கம் என அனைத்து நிகழ்வுகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவார். இப்படியான நிலையில் வைரமுத்து துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 





அதில், “துபாயில் இருக்கிறேன் எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா” என தெரிவித்துள்ளார். 

 

இதற்கு இணையவாசிகள் தரப்பில், “துபாய்காரன் பாலையை சோலையாக்கப் பார்க்கிறான். நம்மவன் சோலையைப் பாலையாக்கத் துடிக்கிறான்” என்றும், “அண்ணன் கவிப்பேரரசு காட்டும் வழி அருமையானது குப்பை மலை என்றால் பின்னர் மக்கியபின் பயன்பாட்டுக்கு வரும் என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.மனிதவாழ்வில் குப்பைகளை தவிர்க்க முடியாது என்பது உண்மை.அதனால்தான் குப்பைகளை பராமரிக்கும் வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளதை பாராட்டவேண்டும் நன்றி” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், “உருப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டால் நாடு உயரும்;நாட்டு மக்கள் நலம் பெறுவார்கள் ... இயற்கையை பாதுகாப்போம்;சுற்றுச்சூழலை சுவாசிக்க விடுவோம்” எனவும் இணையவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டை பொறுத்தவரை கழிவுகளை அகற்றுவதில் அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என இருவகையாக கழிவுகளை பெற்று வந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் குப்பைகளுக்கு என தனியாக ஒருநாள் ஒதுக்குகிறது. மண்டல வாரியாக நோய்கள் பரவா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.