தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து. இவரது இரண்டு மகன்களும் பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும் உலா வருகின்றனர். வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலன் வைரமுத்து. இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் மட்டுமின்றி பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கடந்த 2022ம் ஆண்டு எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாவது பாகமான மாக்கியவெல்லி காப்பியம் தற்போது வெளியாகியுள்ளது.


மாக்கியவெல்லி காப்பியம்:


பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் ,அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இந்த இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜாவே இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியத்தையும் வெளியிட்டுள்ளார்.


முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது.






கபிலன் வைரமுத்துவுடன் சந்திப்பு:

பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான முன்னெடுப்புதான் இந்த இரண்டாம் பாகத்திற்கான முதல் பொறி என்று கபிலன்வைரமுத்து புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.


நாவலுக்கென்று பிரத்யேகமாக மூல் என்ற கணினி மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் நூலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் ஆசிரியர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. மாக்கியவெல்லி காப்பியம் கபிலன் வைரமுத்துவின் பன்னிரண்டாவது நூல் ஆகும். அவர் எழுதிய நாவலில் இது ஐந்தாவது நாவல் ஆகும். ஆகோள் முதல் பாகம் ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.