வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த நடிகை திவ்யா கணேஷ்க்கு சின்னத்திரை கொடுத்த வாய்ப்பு வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், வெற்றியையும் கொடுத்துள்ளது.


சினிமாவில் வந்த நடிகை, நடிகர்களுக்குத் தான் முன்பெல்லாம் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெள்ளித்திரையை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதோடு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிய திரைப்படங்கள் எதுவும் திரைக்கு வராத நிலையில், சின்னத்திரை நடிகைகள் தான் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தனர்.



அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப்பிடித்துள்ளார் திவ்யா கணேஷ். தென் தமிழகமான ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்து மதுரையில் கல்லூரி படிப்பையும் முடித்தார். இதனைத்தொடர்ந்து வக்கீல் ஆக வேண்டும் ஆசையில் சென்னை வந்த இவரது வாழ்க்கைப்பயணமே முற்றிலும் மாறிப்போனது. இவரது திறமை இவரை  சன்டிவியின் கேளடி கண்மணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து  திவ்யா, சுமங்கலி, மகராசி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர், விரைவில் தமிழ் சினிமாவிலும் கால் பதிப்பேன்  என்று கூறியிருக்கிறார்.


சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் :


ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ள திவ்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷூடன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, தங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த திருமணம் தடைபட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் மீண்டும் தன்னுடைய சீரியல் பயணத்தைத் தொடர்கிறார்.  குறிப்பாக திவ்யா மனநிலையை சரி செய்யும் வகையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல்.


அதன்பிறகு பெரிய மன உளைச்சலில் இருந்த திவ்யா தற்போது தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் சீரியலில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பாக்யலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் தன்னை வெளியில் எங்கு பார்த்தாலும், அனைவரும் ஜெனி என்று அழைப்பதாகவே திவ்யா மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார். பாக்யா குடும்பத்தின் மூத்த மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் திவ்யா தனது சிறப்பாக நடிப்பின் மூலம், பல ரசிகர்களைப் பெற்றுள்ளார். மேலும் இவரின் சமூக வலைதளப்பக்கங்களில் நாள்தோறும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றேதான் கூற வேண்டும்..



அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இந்த சீரியலில் மூத்த மருமகளாகப் பொறுப்புடனும், சொந்த தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் மாமியாருக்கு உறுதுணையாக இருக்கும் மருமகளாக ஜெனி கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் செழியனைக் காதலிக்கும் போது முதல் தற்போது கணவருடன் குழந்தைக்காக சண்டைப்போடும் காட்சிகள் முதல் ஏதார்த்த நடிப்பில் கலக்கி வருகிறார். இந்த சீரியலைப்பார்க்கும் ஒவ்வொரு தாய்மார்களும் தனக்கு இதுப்போன்று மருமகள் வர வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு ஒரு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் திவ்யா..


தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு கனவுகள் இருந்தாலும், என்ன தடைகள் வந்தாலும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தனது சீரியல் பயணத்தைத் நடத்திவருகிறார் ஜெனி என்ற திவ்யா. சீரியல் நாயகியாக மட்டுமில்லை இவருக்கு ஆர் ஜேவாக வேண்டும் என்று ஆசையும் அதிகளவில் உள்ளது. பல முறை முயற்சித்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். இருந்தப்போதும் எப்படியாவது கனவை நிறைவேற்றிக்காட்டுவேன் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார் திவ்யா. மேலும் சின்னத்திரை மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடர்வேன் என்ற கனவில் உள்ளார் திவ்யா.