சமூக வலைத்தளங்களில் தன்னையும், குடும்பத்தினரையும் விமர்சித்து தவறாக தகவல்கள் பரப்பப்படுவதாக பிரபல நடிகை லாவண்யா திரிபாதி ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தன் மீதும், தன்னுடைய குடும்பத்தினர் மீது சில நபர்கள் இணையத்தில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில் ஆபாசமாக கருத்துகளை பதிவிடுவதோடு மட்டுமல்லாமல் எடிட், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக தனக்கு குறிப்பிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து தொடர்ச்சியாக தன்னை மற்றும் குடும்பத்தினரை குறித்து செய்திகள் மற்றும் பதிவுகளை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  

ஹைதராபாத் காவல்துறை லாவண்யாவின் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாவண்யா புகார் அளித்துள்ள சமூக வலைத்தளக் கணக்குகள் முழுமையாக ஆராயப்பட்டு வருவதாகவும், என்ன நோக்கத்திற்காக இப்படியான பதிவுகள் வெளியிடப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 78, 79ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இணையவழி தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க கடுமையான சட்டங்களும் இயற்றப்பட்டு வருகிறது. எனினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் குறிவைக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 

லாவண்யா திரிபாதி வாழ்க்கை

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாவண்யா திரிபாதி தெலுங்கு சினிமா மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.  இவர் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகன் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இதற்கிடையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள லாவண்யா திரிபாதியின் அடுத்தப்படமாக சதிலீலாவதி என்ற படம் வெளியாகவுள்ளது. 

லாவண்யா திரிபாதி தமிழில் 2014ம் ஆண்டு வெளியான சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அதன்பிறகு மாயவன், தனல் ஆகிய 3 படங்களில் மட்டுமே நடித்தார். தெலுங்கில் 15 படங்கள் வரை நடித்திருக்கும் லாவண்யா திரிபாதியும் வருண் தேஜும் 2017 ஆம் ஆண்டு 'மிஸ்டர்' படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின் 2018 ஆம் ஆண்டு 'அந்தரிக்ஷம் 9000 KMPH' படத்தில் ஜோடி சேர்ந்தனர். இதன் ஷூட்டிங்கில் தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து 2023ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.