ஒரு பிரபலமாக இருப்பதால் தன் மேல் வன்மத்தை காட்டுவதாக தன்னை வழக்கில் சிக்கவைத்தவர்களை லதா ரஜினிகாந்த் கடுமையாக சாடியுள்ளார். 


கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “கோச்சடையான்”. இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். மேலும் தமிழ் சினிமாவில் முதல் மோஷன் கேப்சர் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு. எந்திரன் படத்துக்குப் பின் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அதிலிருந்து மீண்டு வந்து நடித்த படம் தான் கோச்சடையான். 


ஆனால் இந்த படம் ரசிகர்களை கவர தவறியது.ரஜினியை பொம்மை போன்ற உருவமாக பார்க்க யாருமே விரும்பவில்லை. இப்படியான நிலையில் இந்த படத்தை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. கோச்சடையான் படத்துக்காக மீடியா ஒன் நிறுவனத்தினர் ஆட் பீரோ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்கள். 


இதுதொடர்பான கடன் ஒப்பந்தத்திற்கு ரஜினியின் மனைவியான லதா சாட்சி கையெழுத்திட்டிருந்தார். ஆனால் குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்ததால் லதா ரஜினி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் இதுவரை ஆஜராகமால் இருந்த லதா நேற்று ஆஜரானார். அப்போது அவர் தலையில் முக்காடு போட்டு சென்றது மிகப்பெரிய அளவில் வைரலானது. 


இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் மோசடி எதுவும் செய்யவில்லை. கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மீடியா ஒன் முரளி, ஜெயக்குமாரும் கோச்சடையான் டைட்டில் தயாரிப்பாளராக இருந்தார்கள். அவர்கள் வாங்கிய கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டேன். அவங்க பணம் செட்டில் பண்ணிட்ட பிறகு அவர்களுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் அதன்பிறகு அவர்கள் ஒப்பந்தத்தை மாற்றி விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே எனக்கு இருவரும் ரொம்ப பிரச்சினை கொடுத்து வந்தார்கள்.


உச்சநீதிமன்றம் என்னை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என சொல்லிட்டாங்க. ஆனால் யாரோ ஒருவர்   ஒரு கடிதத்தை கர்நாடகா நீதிமன்றத்தில் அளித்துள்ளார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி முரளி, ஜெயகுமார் என்னை துன்புறுத்தி வந்தார்கள். தடவியல் துறை கூட ஆய்வு செய்து அந்த கடிதத்தில் இருப்பது என் கையெழுத்து இல்லை என சொல்லி விட்டார்கள்.ஒரு பிரபலமான நபராக இருப்பதால் என்னிடம் ஏதோ ஒரு வன்மத்தை காட்டினார்கள். நான் சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து வழக்கில் ஆஜராக சொன்னார்கள் என்பதால் சென்றேன். வெயில் அடித்ததால் தலையில் முக்காடு போட்டு சென்றேன். அதற்குள் ஏதேதோ தகவல்கள் எல்லாம் வெளிவந்து விட்டது. அதனால் தான் நான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன்.