எழுதாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின் திரைவடிவம் பெறவிருக்கிறது. சுமார் ரூ.50 கோடி செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பாக இந்த வெப் சீரிஸ் உருவாக உள்ளதாகவும் சசிகுமா இந்த தொடரை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'குற்றப் பரம்பரை' நாவலின் திரை வடிவம் பல ஆண்டுகளாக சர்ச்சைகளால் தடைபட்டிருந்தது. எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் புகழ்பெற்ற நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குநர் பாரதிராஜா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாலாவும் இதே தலைப்பில் படம் உருவாக்க இருப்பதாக அறிவித்ததால் தமிழ் சினிமாவில் பெரிய விவாதம் ஏற்பட்டது. ஒரே இலக்கியப் படைப்பை யார் முதலில் திரையாக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து காப்புரிமை, படைப்புரிமை மற்றும் கதையை திரையாக்கும் உரிமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் நீடித்ததால், பல ஆண்டுகளாக 'குற்றப் பரம்பரை' திரைப்படம் உருவாகாமல் போனது. இதனால், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கியத் தழுவல் திரைக்கு வராமல் இருந்தது.
வெப் சீரிஸ் வடிவில் குற்றப் படரம்பரை நாவல்
இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பின் குற்றப் பரம்பரை திரைப்படத்தை இனி யார் இயக்கப்போவது என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. தற்போது குற்றப் பரம்பரை நாவல் பிரம்மாண்டமான இணையத் தொடராக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸின் திரைக்கதை மற்றும் வசனப் பணிகளில் இயக்குநர் ரத்னகுமார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சத்யராஜ் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வெப் சீரிஸ் வடிவில் இந்தக் கதை உயிர் பெறுவது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இந்த படம் இயக்குநர் பாரதிராஜாவின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த நிலையில் தற்போது அவரது மறைவிற்கு பின் உருவாக இருக்கிறது. . பிரம்மாண்ட தயாரிப்பு, இலக்கியப் பின்னணி, வலுவான தொழில்நுட்பக் குழு மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஆகியவை ஒன்றிணைவதால், 'குற்றப் பரம்பரை' தமிழ் சினிமா வரலாற்றில் உருவாகும் மிகச் சிறந்த வெப் சீரிஸ்களில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
