இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சாதி பெயர் கொண்ட பாடல்களை பொது வெளியில் ஒலிபரப்ப தடைவிதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


சாதி பெயர் கொண்ட பாடல்கள்:


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா & தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை விதித்தல் செய்திட தமிழ்நாடு முதலமைச்சரிடம்  வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவில், தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இவரது இந்த பதிவு, அண்மையில் நடைபெற்ற மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் தன்னை மனபிறழ்வுக்குள்ளாக்கியது என கூறினார். மேலும், தேவர் மகன் படத்தின் இசக்கி கதாப்பாத்திரம் தான் மாமன்னன் உருவாக காரணம் எனக் கூறினார். இது பொது வெளியில் ஆதரவான கருத்துக்களையும் எதிரான கருத்துக்களையும் உருக்கியுள்ளது. 


மாரிசெல்வராஜ் சர்ச்சை பேச்சு:


இது தற்போது பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியதாவது “நான் அப்படி பேசியிருக்க வேண்டாம் என பலர் என்னிடம் சொன்னார்கள். தேவர்மகன் படத்தை விமர்சித்து கடிதம் எழுதவில்லை என சொல்லவில்லை. என் உணர்வுகள் உண்மையானவை, ஆகையால்  நான் நடிக்க முடியாது. ‘மாமன்னன் திரைப்படம் நம்முடைய அரசியல்’ என கமல் சொன்னார். ஏக்கத்தின் அடிப்படையில் வந்த வார்த்தைகளை தான் மேடையில் பேசினேன்" என்று கூறியுள்ளார்.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி நடிப்பில் கடைசி படமாக வெளியாகவுள்ளது. 


 இதற்கிடையே மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசரவணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று  நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இருவரும் வருகிற 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும்  இவ்வழக்கு விசாரணையை 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 


இதற்கு முன்னர், தேவர் மகன் திரைப்படத்தின் பெயர் மற்றும் ”போற்றிப்பாடடி” பாடலுக்கு நானும் இசையமைப்பாளர் இளையராஜாவும் வருத்தம் தெரிவிக்கிறோம் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.