கோலிவுட் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் திரையரங்குகளில் வெளியான பெரும்பாலான படங்கள் மக்களை ஈர்க்கவில்லை. விஜயின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து ரிலீஸ் தடைபட்டது. இப்படத்தின் ரிலீஸ் தெதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மறுபக்கம் அஜித் , சூர்யா , விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களும் படங்கள் கமிட் ஆவதிலும் வெளியிடுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஸ்டார்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்கிற கருத்து ரசிகக்ரளிடையே பரவலாக முன்வைக்கப்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சறுக்குவதே இதற்கு காரணம். கடந்த ஆண்டுகளில் ரஜினியின் கூலி , கமலின் தக் லைஃப் , சூர்யாவின் கங்குவா , அஜித்தின் விடாமுயற்சி , விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து பாகஸ் ஆபிஸில் சொதப்பின. மாறாக நல்ல கதையம்சம் உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் பெரியளவில் வசூல் குவித்தன.
ஸ்டார்களின் சம்பளம்
படங்கள் ஓடவில்லை என்றாலும் பெரிய நடிகர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தங்கள் சம்பளத்தை மட்டும் உயர்த்திக்கொண்டே போகிறார்கள். இதனால் படங்களின் பட்ஜெட் கண்டபடி உயர்கிறது. இதனால் நடிகர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
திண்டாடும் தமிழ் நடிகர்கள்
தற்போதைய நிலைப்படி கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் நல்ல கதை கிடைப்பதற்கும் எடுத்த படத்தை வெளியிடுவதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கேள்விக்குறியாக நிற்கிறது. இன்னொரு பக்கம் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பல மாதங்களாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அஜித்தின் சம்பளம் காரணமாக அவரது அடுத்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் இதுவரை முவரவில்லை. மறுபக்கம் நடிகர் விக்ரமின் அடுத்த படம் இரண்டு இயக்குநர்களுடன் அறிவிப்பு வெளியாகி கைவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகளை விட்ட சிம்புவின் படங்களும் படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. இந்த ஆண்டில் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சொல்லிக்கொள்ளும் படியாக வசூல் ரீதியாக எந்த படமும் வெற்றிபெறவில்லை. இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என தயாரிப்பாளர்கள் , திரையரங்க உரிமையாளர்கள் திணறி வருகிறார்கள்
