இன்றைய செய்திகள் குறிப்பாக சினிமா செய்திகளை உடனடியாக சோஷியல் மீடியா மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்றுமே பிளாஷ்பேக் கதைகளை கேட்கும்போது அதற்கு இருக்கும் சுவாரஸ்யமே வேற லெவல்தான். அப்படி ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்றை நடிகர் சிவகுமார் ஒரு முறை மேடையில் பேசியபோது குறிப்பிட்டு இருந்தார். அது என்ன என்பதை தெரிந்துகொள்ளலாமா?


எஸ்பிடி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 1977-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கவிக்குயில்'. சிவகுமார், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், செந்தாமரை, எஸ்.வி. சுப்பையா மற்றும் ஃபடாபட் ஜெயலக்ஷ்மி உள்ளிட்டோரின் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான இப்படம் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை. 



கடவுள் நம்பிக்கை மிகுதியாக கொண்ட இசைக்கலைஞனாக நடிகர் சிவகுமார் நடித்திருந்தார். இப்படத்தில் கர்ணனும், கவசகுண்டலமும் போல என்றுமே புல்லாங்குழலுடன்தான் காட்சி அளிப்பார். இப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் ஒரு கதையை பகிர்ந்து இருந்தார்.


ஒரு சினிமா நடிகன் எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்பது பற்றி பலரும் அறிந்து இருக்கக்கூடும். அந்த வகையில் சிவகுமார் நடித்த 'கவிக்குயில்' படத்தின் ஒரு காட்சி மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டது. அப்போது மழை பொழிய மலையின் மீது சிவகுமார் படுத்திருப்பது போன்ற காட்சி அது. அதற்காக செயற்கையாக மழையை பொழிய வைத்தனர். காட்சியும் படமாக்கப்பட்டது. 


படப்பிடிப்பு நடத்தும் அந்த நேரத்தில்தான் படக்குழுவினருக்கு ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது அந்த மலை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அவர்களின் காலை கடன்களை கழிக்க அந்த இடத்தை தான் பயன்படுத்துவார்களாம். அந்த சமயத்தில் வேறு ஒரு இடத்தை தேட முடியாது என்ற காரணத்தால் அதே இடத்தில் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 


செயற்கையாக பொழிந்த மழையில் மலக்கழிவுகளும் கலந்து வர அது சிவகுமார் உடல் எங்கிலும் படர்ந்து கடந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மனதிற்கு சற்று வேதனை அளித்தாலும் ஒரு காலகட்டத்தில் மனித மலம் அள்ளியே தனது வயிற்று பிழைப்பை நடத்திய மக்களும் இருந்தனர். அவர்களை நினைத்து பார்க்கையில் நான் பட்ட கஷ்டம் ஒன்றும் பெரிதல்ல என தனது  மனதை தேற்றி கொண்டாராம் நடிகர் சிவகுமார். 


இந்த பிளாஷ்பேக் ஸ்டோரியை கேட்கும்போது மனம் அசரத்தான் செய்கிறது. திரைப்படத்துக்கு பின்னால் பெரும் போராட்டங்கள், சகிப்புத்தன்மை என பல விஷயங்கள் அடங்கியுள்ளன என்பது இந்த கதை மூலம் தெரிகிறது.