கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. 2009ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த சிரஞ்சீவி சர்ஜா, தமிழ் சினிமா ஆக்ஷன் கிங் என கொண்டாடும் நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகனாவார். கன்னட திரையுலகில் மிகவும் விரும்பப்படும் ஒரு நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் 2020ம் ஆண்டு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 39 வயதில்  சிரஞ்சீவி சர்ஜாவின் இழப்பு கன்னட திரையுலகத்தினர், ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. 


 



உடனே முடிந்த காதல் வாழ்க்கை :


பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த சிரஞ்சீவி சார்ஜா மற்றும் நடிகை மேக்னா ராஜ் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோஷமாக பல கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கிய இந்த காதல் ஜோடியின் வாழ்க்கை இப்படி சில மாதங்களிலேயே முடிவுக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சிரஞ்சீவி சார்ஜா உயிரிழக்கும் போது அவரின் மனைவி மேக்னா ராஜ் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தையை வரவேற்க மிகவும் ஆவலுடன் இந்த இந்த ஜோடிக்கு ஏற்பட்ட இந்த சோகம் அனைவரின் கண்களையும் கண்ணீரால் குளமாக்கியது. 


மகன் தான் உலகமே :


மெல்ல மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த மேக்னா ஒரு மகனை பெற்றெடுத்தார். அவனுக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டு தனது மொத்த வாழ்க்கையையும் அவனுக்கான அர்ப்பணித்து வருகிறார். குழந்தையை வளர்த்து வரும் ஒவ்வொரு தருணத்தையும் தனது கணவரின் முன்னிலையில் அழகான பதிவாக அவரின் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ராயன் ராஜ் சார்ஜாவின் முதல் நாள் பள்ளி வாழ்க்கையை பகிர்ந்து அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெற்றார். அச்சு அசலில் அப்படியே அப்பாவை உரித்து வைத்து இருக்கும் ராயன் ராஜ் சார்ஜா தான் மேக்னாவின் உலகம். மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும், துணிச்சலான பெண்ணாகவும் இருந்து வருகிறார். 


 



மேக்னா ராஜ் அவ்வப்போது சிரஞ்சீவி சர்ஜாவுடன் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்து அவரின் அன்பை வெளிப்படுத்துவார். இந்த நினைவு நாளில் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு  "எனது நேற்று, இன்று மற்றும் எப்போதும்" என கேப்ஷன் எழுதி போஸ்ட் செய்துள்ளார்.  என்ன தான் ஒரு உறுதியான பெண்மணியாக இருந்தாலும் கணவர் இல்லை என்ற வருத்தம் அவருக்குள் புதைந்து கிடக்கிறது. சிரஞ்சீவி  சார்ஜா இந்த உலகை விட்டு பிரிந்து இன்றுடன் மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது.


மேக்னாவின் ரீஎன்ட்ரி :


குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறிது காலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட மேக்னா ராஜ் தற்போது பன்னகா பரனா தயாரிப்பில் 'தட்சமா தத்பவ' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியானது. அதில், மேகனா ராஜ் சர்ஜா பயமுறுத்தும் தோற்றத்தில் இரு கைகள் வாயை மூடியபடி இருப்பது போல வெளியானது.  இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.