இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். அரசியலில் ஈடுபட்ட பிறகு தீவிர நடிப்பில் இருந்து ஒதுங்கிய கமல்ஹாசன், பிக்பாஸ் தொடரை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.




பிரம்மாண்ட நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படுவது வழக்கம். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் விக்ரம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில், விக்ரம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியான அதிகாலை 4 மணி சிறப்புக்காட்சியை ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த தகவலால் கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். பொதுவாக மிகப்பெரிய நடிகர்களான ரஜினி, கமல்ஹாசஜன், அஜீத் மற்றும் விஜய் ஆகியோர் தங்களது திரைப்படங்களை ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பதில்லை. அவர்கள் பிரத்யேக காட்சிகளாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினர் ரசிகர்களுடன் இணைந்தோ மட்டும் பார்த்து வருகின்றனர். இந்த சூழலில், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை கமல்ஹாசன் ரசிகர்களுடன் பார்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த படத்தில் கமல்ஹாசன் மட்டுமின்றி நடிகர்கள் விஜய் சேதுபதி, பஹத்பாசில், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய மூன்று படங்களுமே தனித்துவம் வாய்ந்த படமாக அமைந்தது. கைதி படத்தில் கார்த்தியை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அசத்திய லோகேஷ், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயையும், விஜய் சேதுபதியையும் ரசிகர்களால் கொண்டாட வைத்திருப்பார்.


கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேங்ஸ்டர் ரக கதையான இந்த படத்தின் டிரெயிலரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண