விக்ரம் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 


இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் படம் ரிலீஸான நாள் முதல் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி தள்ளியுள்ளனர். 






வசூலிலும் இப்படம் சாதனைப் படைத்துள்ளது.கிட்டதட்ட உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள விக்ரம் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தரமான படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அதேபோல் தான் தரமான நடிகர்களையும். அந்த வெற்றி வரிசையில் என்னையும், என் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். 


தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், செம்பன் வினோத், நரேன் ஆகியோர் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர்கள். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத், சண்டை பயிற்சியாளர் அன்பறிவு, எடிட்டர் பிலோமின் என அனைவருக்கும் வெற்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். கடைசி 3 நிமிடமே வந்து திரையரங்கை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். 


அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்த நாங்கள் இணையும் படத்தில் காட்டிவிடலாம் என நினைக்கிறேன். இயக்குநர் திரு லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும், என் மீதும் இருக்கும் அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அதுபோலவே இருந்தது. உங்கள் அன்பு தொடர விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்