கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் “தக் லைஃப் (Thug Life)” படம் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. 


நாயகன் படத்துக்கு பிறகு கிட்டதட்ட 35 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி மீண்டும் கமலின் 234வது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு ‘தக் லைஃப் (Thug Life)' என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் அறிவிப்பு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 6) ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கவுள்ளார். 


தமிழ் சினிமாவின் அடையாளமாக அறியப்படும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு படங்களில் நடிப்பதை குறைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமலின் சினிமா கேரியரில் முதல் ரூ.400 கோடி வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இதனை தவிர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆண்டுதோறும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் தரிசனம் கொடுத்து வருகிறார். 






இப்படியான நிலையில் மீண்டும் கமல்ஹாசன் முழுவீச்சில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணி ரத்னம் படம், கல்கி ஏடி 2989 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ’நாயகன் மீண்டும் வர்றார்’ என முழக்கத்தோடு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமலின் சினிமாவில் பிஸியான ரீ-எண்ட்ரீயை கொண்டாடி வருகின்றனர். 


இதற்கிடையில் தக் லைஃப் (Thug Life)  படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து தயாரிக்கிறது, இந்த படத்தின் டைட்டில் வீடியோவில், ‘வெட்டவெளியில் கமல்ஹாசன் உடல் முழுவதும் துணியை சுற்றிகொண்டு என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினக்காரன் என கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த தக் லைஃப் படத்தின் இண்ட்ரோ வீடியோ எங்கிருந்து உருவாக்கப்பட்டது என ரசிகர்கள் தேட தொடங்கியதற்கு விடை கிடைத்து விட்டது. 2019 ஆம் ஆண்டு வெளியான rise of skywalker என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.