கமல்ஹாசன், விஜய்சேதுபதியை வைத்து ஹெச்.வினோத் ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், வலிமை இயக்குநர் ஹெச்.வினோத் இணைகின்றனர் என்றார். கமல்ஹாசனின் 233வது படமான இதற்கு தற்காலிகமாக KH 233 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ரோல் அமோக வரவேற்பைப் பெற்றது.


‘சதுரங்க வேட்டை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஹெச்.வினோத் முதல் படத்திலேயே தனது அழுத்தமான திரைக்கதை மூலமாக கவனம் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன்  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இணைந்த அவர், அந்தப்படத்தில் காவல்துறையின் பாசிட்டிவான பக்கத்தை பற்றி பேசியிருந்தார்.  ‘பவேரியா கொள்ளையர்கள்’  பற்றிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.


இதனைத்தொடர்ந்து  ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் இந்தப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.


இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்த ஹெச்.வினோத் வலிமை படத்தில் கொரோனா சூழ்நிலை காரணமாக தாங்கள் எடுக்க நினைத்ததில் பாதியை மட்டுமே எடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்தக்கூட்டணி மீண்டும் இணைவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்திற்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் தொடர்பான போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. பஞ்சாப்பில் நடந்த வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹெச்.வினோத் கமல் இணையும் படம் குறித்தான அறிவிப்பு வெளியாக உள்ளது.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2023ல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஹெச்.வினோத் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.