நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கார்கி.


இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன் காளி வெங்கட் நடித்திருக்கிறார். காளி வெங்கட் நேர்மையான வழக்கறிஞராக நடித்திருக்கிறார். படத்தில் அவரின் நடிப்பு அல்டிமேட் என்று விமர்சனங்கள் வருகின்றன.
இந்நிலையில் அவர் கார்கி செய்தியாளர் சந்திப்பில் பேசிய காளி வெங்கட், தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.


ஸ்கோர் பண்ண முடியாது:


"எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த சூர்யா சாருக்கு நன்றி. லவ் யூ சார். வி.ஆர் மாலில் தான் எனக்கு சார் இந்தக் கதையை சொன்னார். கதையைக் கேட்கும் போது எனக்கு இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று எனக்கு பயம் இருந்தது. ரெகுலரான ஸ்க்ரிப்ட் இல்லையே என்று பயந்தேன். ஆனால் இது நம்ம கேரியரில் நல்ல படமாக இருக்கும் என்றும் தோன்றியது. நடிக்கவும் பயம், விடவும் மனசில்லை. இந்தப் படம் எப்படி எல்லோரிடமும் போய் சேரப்போகிறது என்று படபடப்பு இருந்தது. ஒருவழியாக அவர் க்ளைமாக்ஸ் சொன்னபோது தான் சமாதானம் அடைந்தேன். இந்தப் படத்தை விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்தேன். 


இந்தப் படத்தில் நடிக்கும்போது நிறைய ப்ராக்டிக்கல் இஸ்யூஸ் இருந்தன. சாய் பல்லவியுடன் நடிக்கும்போது என்னால் ஸ்கோர் பண்ணவே முடியாது. நான் முதல் நாளே சீனுக்காக அவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணி வருவேன். ஆனால் ஸ்பாட்டில் சாய் பல்லவி ஒரு சிறு க்ளோஸ் அப் ரியாக்‌ஷ்னில் எல்லாவற்றையும் முடித்துவிடுவார். ஆனாலும் சாய் பல்லவி என்னை ரொம்ப கம்ஃபர்டிபளாக நடிக்கும்படி பார்த்துக் கொண்டார். அதற்காக சாய் பல்லவிக்கு நன்றி. அதுமட்டுமில்ல இந்தப் படத்தினை லைவ் சவுண்ட் முறையிலேயே எடுத்தார்கள். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. 


ஆடியன்ஸ் கூட அமைதி காப்பார்கள். ஆனால் தெருவில் உள்ள நாய்கள், சுற்றுவட்டாரத்தில் உள்ள குழந்தைகள் அழுது சொதப்பிவிடுவார்கள். அதனாலேயே நாய்களை சமாதானம் செய்ய அசிஸ்டென்ட் டைரக்டஸ் பையில் பிஸ்கட் பாக்கெட் வைத்துக் கொண்டே திரிவார்கள். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.


கார்கி கதைக் களம்:


அன்றாட வாழ்வுக்கான செலவுகளை எண்ணி, பார்த்துப்பார்த்து செலவழிக்கும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். டீச்சர் வேலைக்கு சென்று குடும்பத்தை தோளில் சுமக்கும் கார்கியின் (சாய் பல்லவி) அப்பா பிரம்மானந்தம் (ஆர் எஸ் சிவாஜி) அப்பார்ட்மெண்ட் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். 


திடீரென்று ஒரு நாள் அந்த அப்பார்ட்மெண்டில், 9 வயது சிறுமி சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட, அதில் பிரம்மானந்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி காவல்துறை அவரையும் கைது செய்கிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சாய்பல்லவி, அப்பாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடுக்கும் முயற்சிகளும், பிரம்மானந்தாவிற்கும், அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருந்ததா, உண்மையில் அங்கு நடந்தது என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்குமான விடையே கார்கி. 




சாய் பல்லவியின் கரியரில் மற்றொரு மைல்கல் இந்த கார்கி. டீச்சராக, அக்காவாக, மகளாக, காதலியாக என பெர்ஃபாமன்ஸில் ஸ்கோர் அடிக்க அவ்வளவு ஸ்பேஸ். அதை கனகச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் பல்லவி. கண்ணாடி வளையல், பருத்திச் சேலை, நெற்றியில் திருநீர்க்கீற்று, ஹேண்ட் பேக் என வலம் வரும் கார்கி, அசத்துகிறார்.


ஊரே புறக்கணித்தாலும் தனது குடும்பத்திற்காக தூணாக, நின்றே தீருவேன் என்ற பிடிவாதம், வாட்டி வதைக்கும் இக்கட்டான சூழ்நிலையில் கூட நிலைகுலையாத தன்னம்பிக்கை, ஒதுங்கி நிற்கும் காதலனை புறந்தள்ளும் அறத்திமிர், உண்மையின் பக்கம் நிற்கும் நேர்மை என எல்லா இடங்களிலும் சாய்பல்லவி மிளிர்கிறார்.