திரைக்கதை மன்னர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே.பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பு என்று ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

Continues below advertisement

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் இரங்கல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவரின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். எம்ஜிஆரும் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார்.

தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர்

இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, ’’தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

பாடமான படைப்புகள்

ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.

அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை இரங்கல்

சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, கே. பாக்கியராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

மக்களின் பேரன்பைப் பெற்றவர்

தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர். திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ரவிக்குமார் அஞ்சலி

திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கமர்ஷியல் நோக்கத்துக்கென எடுக்கப்பட்ட தனது திரைப்படங்களின் மூலமும்கூட சில சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். மரணம் திடுமென அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது.

தமிழ்த் திரையுலகில் அவரது மறைவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை இட்டு நிரப்ப எவருமில்லை. அவருக்கு என் அஞ்சலி!’’

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.