நான் தமிழ் பெண் என அனைவரும் நினைத்திருந்தனர்; ஆனால் நான் மலையாளி. அவர்கள் அப்படி நினைக்க காரணம் உண்டு என நடிகை மாளவிகா மனோஜ் தெரிவித்துள்ளார். 


கேரளாவில் பிறந்து மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மனோஜ். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பிரகாஷன் பரக்கட்டே என்ற மலையாளப்படம் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் நாயாடி என்ற படத்திலும் நடித்தார். 


ஆனால் இரண்டு படங்களுமே அவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியையோ, பிரபலத்தையோ தரவில்லை. இதையடுத்துதான், தமிழில் ஜோ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதில் சுசித்ரா என்ற கேரக்டரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கினார். இதில் ஹீரோவாக ரியோ நடித்திருந்தார். இப்படமே அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. 


2023ஆம் ஆண்டு வெளியான ஜோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல காதல் திரைப்பட அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. அதிலும் 2கே கிட்ஸ் இப்படத்தையும் சுசித்ரா கேரக்டரில் நடித்த மாளவிகா மனோஜையும் கொண்டாடித் தீர்த்தனர். சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் காட்சிகள் சுற்றிக்கொண்டே திரிந்தன. 


இந்நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை மாளவிகா மனோஜ் “ஜோ படம் வெளியே வந்தபோது அதுகுறித்த ரீல்ஸ்கள் அதிகம் இணையத்தில் பகிரப்பட்டன. இது மக்களை எளிதாக சென்றடைந்தது. இப்போதெல்லாம் ரீல்ஸ்களை பார்த்துதான் மக்கள் படத்தை முடிவு செய்கிறார்கள். 


நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை சுச்சி என்றுதான் அழைக்கின்றனர். இப்படத்திற்கு முன் கேரளாவில் என்னை யாருக்கும் தெரியாது. இப்போது என்னை நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு காரணம் ஜோ படம் தான். கேரளாவில் ஜோ படம் ஓடிடியில் வெளியாது முதல் நான் தமிழ் பெண் என்றே நினைத்தார்கள். ஆனால் நான் ஒரு மலையாளி” எனத் தெரிவித்தார்.