நடிகர் சூர்யா நடிப்பில் அவரது 2டி எண்டர்டெயிமெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கி உருவாகிவரும் படம் ’ஜெய்பீம்’. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். தற்போது இந்தப் படம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குநர் ஞானவேல். ஜெய்பீம் திரைப்படம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து வேறு எந்தப்படமும் இவ்வளவு ஆழமாகப் பேசியதில்லை. முதன்முதலாக ஜெய்பீம் படத்தில் நாங்கள் அந்தப் பணியைச் செய்திருக்கிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.






முன்னதாக, தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் அவரது 39வது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டது. படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது. சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக்கின் வழி தெரியவந்தது. மேலும் ’ஜெய் பீம்’ என்றால் என்ன? அந்த டைட்டிலுக்கும் சூர்யாவின் கதாப்பாத்திரத்துக்கும் என்ன தொடர்பு என்று கூகுளில் அவர் ரசிகர்கள் பலர் தேடினர். இந்தப்படத்தின் தலைப்பு வைரலாகியுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் ஜெய்பீம் படம் தொடர்பான புகைப்படங்கள் சில வெளியாகியிருந்தன. அதில் சூர்யா அச்சு அசலாக வழக்கறிஞர் போலவே மாறியுள்ளார். வித்தியாசமான ஹேர்ஸைல், கண்ணாடி என சூர்யா வேர கெட்டப்பில் உள்ளார். மேலும் நாயகி ரஜிஷா விஜயன் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் ஓய்வுபெற்ற நீதிபது சந்துரு உடனிருக்கும் புகைப்படமும் வைரலாகி வந்தது.


ஓய்வுபெற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஒரு பழங்குடிப் பெண்ணுக்காக (அவர் வழக்கறிஞராக இருந்தபோது) போராடிய வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது ஜெய் பீம் திரைப்படம். இந்தப் படம் பழங்குடிப் பெண்ணுக்கு போலீசாரால்  செய்யப்பட்ட அநீதி மற்றும் சந்துருவின் சட்டப் போர் ஆகியவற்றை குறித்து பேசும் எனக் கூறப்படுகிறது.


பொதுவில் ’ஜெய் பீம்’ என்கிற சொல் பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல். பீம் என்றால் அம்பேத்கரைக் குறிப்பது. ஜெய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள். ஜெய் பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி என்பது பொருள். 1936ல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமயத்தில் மும்பை சால் பகுதியில் அவரது ஆதரவாளர் ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜெய்பீம் எனச் சொன்னதாகவும். பிறகு பெரும்பான்மையான மக்கள் அந்தச் சொல்லை உபயோகிக்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 1 ஜனவரி 1818ல் கோரேகான் போர் சமயத்தில் பீமா நதியைக் கடந்த வீரர்கள் ஜெய்பீம் என முழங்கிச் சென்றதாலும் இந்த பெயர் உருவானதாக கூறப்படுகிறது. அம்பேத்கர் ஒவ்வொரு வருடமும் கோரேகான் பகுதிக்குச் சென்று போர் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தார். இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, பொருளாதார வல்லுநர், பெண்ணியவாதி, கல்வியாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒற்றைக்குரலாக ஒலித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். மிக முக்கியமாக இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர். தற்போது அவரது பெயரையொட்டிதான் சூர்யாவின் 39-வது படத்துக்கும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.