தன்னுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து நடிகர் மைக் மோகன் மனம் திறந்து பேசியுள்ளார். 


மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்றும் மைக் மோகன் என்றும் பெயர் வந்தது.


உதயகீதம்,இதயகோயில், கோபுரங்கள் சாய்வதில்லை, தென்றலே என்னைத் தொடு,இளமைக் காலங்கள்,விதி, ஓசை, நூறாவது நாள் என மோகனின் திரை வாழ்க்கை சூப்பர் ஹிட் படங்களுடன் தொடங்கியது. அத்தனையும் வெள்ளிவிழாத் திரைப்படங்கள்.1984-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மொத்தம் 19 திரைப்படங்கள் வெளியாகின. 80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் போட்டியாக வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தந்த மைக் மோகனின் சமீபத்திய பேட்டியின் சுருக்கம்.



கேள்வி:1980 -களில் சினிமா துறையில் உச்சத்தில் இருந்த நடிகர் நீங்கள். ஆனால்,அதன்பிறகு ஒரு நீண்ட ப்ரேக் ஏன்?


பதில்:இன்னதுதான் காரணம்ன்னு ஒன்றைச் சொல்லிட முடியாது. நிறைய காரணங்கள் இருக்கு. ஒரு காலத்தில், ஒரு நாளைக்கு 20 முதல் 22 மணி நேரம் வேலை செய்தேன். தொடர்ந்து என் திரைப்படங்கள் வெளியாகின. எனக்கான நேரம் இல்லாமல் இருந்தது போல ஒரு உணர்வு. அதான் ஒரு ப்ரேக் தேவைப்பட்டது. அதற்கான நேர்ம் ஒதுக்க வேண்டி இருந்துச்சு. அப்பறம், கல்யாணம் குடும்பம் என்று ஒரு ப்ரேக் எடுத்தேன். 


கேள்வி: ஒரு சில படங்களில் மட்டுமே பாடல்கள் பாடியிருந்தாலும், நீங்கள் இன்றும் மைக் மோகன் என்று அறியப்படுவது என்ன காரணம்னு நினைக்கிறீர்கள்?


பதில்: திரைப்படங்கள் வெற்றியடைய பாடல்கள் முக்கிய காரணம். 80-களில் என்னுடைய படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள்தான். அப்படியே இயல்பா பாடல்களும் ஹிட் ஆகிடுச்சு. பின்னர், மோகன் நடிக்கிற படங்களில் பாடல்கல் பாடினா ஹிட் ஆகிடும்னு ஒரு பெயர் உருவாகிடுச்சு.


கேள்வி: உங்களைப் பற்றிய வதந்திகள் நிறைய வருவது வழக்கமாக இருந்தது. அதை எப்படி கடந்து வந்தீர்கள்? உங்களைப் பாதித்த நிகழ்வு எது?


பதில்: என் குடும்பம், நெருங்கிய நண்பர்களுக்கு நான் என்ன செய்கிறேன், எது உண்மை என்று தெரியும். அப்படியிருக்க, நான் வதந்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்ல்லை. ஆனால், என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சற்று வருத்தமாகதான் இருந்தது. என்னை மிகவும் பாதித்த ஒன்று என்றால், ஒரு முறை என் ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று  மாலையோடு வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்களுக்கு நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று சொல்லி அனுப்புவது மிகவும் வேதனையாக இருந்தது. அப்போதிலிருந்து,என் ரசிகர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பதால், அவர்களுக்கு என்னை யார் என்று தெரியும். அதனால், ஓரவிற்கு சமாளிக்க முடிந்தது. இருந்தாலும், வதந்திகள் பரவிய காலம் கசப்பானது. இப்போ அதேல்லாம் பழசாகிடுச்சுல்ல. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண