கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது. படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். நடிகர் கார்த்தி கூறியது போன்று சமூகம் சார்ந்த பணிகள் எல்லாரும் செய்ய முன்வர வேண்டும். இரும்புக்கை மாயாவி படம் இப்போது பண்ண முடியாது. அதுதான் என்னுடைய டீரிம் ப்ராஜெக்ட் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.


அண்மையில் நண்பர் விளம்பரம் பண்ணுவதற்கான ஒரு யூனிட் செட்டப் தேவைப்பட்ட போது கோவையில் கிடைக்கவில்லை. பாலக்காட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை இருக்கிறது. வருங்காலத்தில் கோவையில் படம் பண்ணுவதற்கான நிலை வர வேண்டும். அதற்கான முதல் கால் நான் எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன். வங்கியில் நான்கு வருடம் வேலை செய்தேன். நமக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வேண்டும். அதன்படி தான் சினிமாவிற்கு வந்துள்ளேன். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இல்லை” எனத் தெரிவித்தார்.


விஜய் அரசியலுக்கு தகுந்த நபர் என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ”அரசியலைப் பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அரைகுறைவான அறிவு ஆபத்தானது என்ற பழமொழி உண்டு. ஆக எனக்கு அதைப் பற்றி எனக்கு தெரியாது. விஜயை நான் அண்ணன் என்று கூப்பிடுவதற்கு அவர் நல்ல மனுஷன். அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய் கூட மூன்றாவது படம் இணைய காத்திருக்கிறேன். கண்ணிமைத்தால் படம் பண்ணிருவேன்” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “சமூக நீதிச் சார்ந்த படங்கள் இயக்க போதிய அறிவு எனக்கு இல்லை என நினைக்கிறேன். சினிமாவில் 150 ரூபாய் கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப் பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமா தான். வேற எந்த படங்களும் எடுப்பதில்லை. ஆயிரம் கோடி வசூல் இட்டுமா என்பது கருத்தை தாண்டி, எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய ஒரு 150 ரூபாய் முக்கியம். லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் பண்ணுகிறேன். அதை தொடர்ந்து கைதி 2 நடக்கும். வருமான வரித் துறையில் இருந்து எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள். அப்போது நான் கூறிய வார்த்தை வருமான வரி கட்டும் பணம் யாருக்கு பயன்படுகிறது என்று தெரியவந்தால் கொடுப்பது எனக்கும் மகிழ்ச்சி ஒரு வெளிப்படை வேண்டுமென தான் குறிப்பிட்டிருந்தேன். சமூக வலைதளங்களில் வெளியாகும் படத்தை ஒன்னும் செய்ய முடியாது. எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் படத்தை பகிர்கிறார்கள். ஆனால் அதற்கு பின்பு ஏரளமான மக்களின் உழைப்பு இருக்கிறது. அதை தெரிந்தால் பன்ன மாட்டார்கள். செப்டம்பர் மாதம் லியோ ஆடியோ லான்ச் மற்றும் ரிலீஸ் ஆகும். கோவைக்கு ஏதாவது பண்ணி விஜயை கூப்பிட்டு வர முயற்சி பண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.