16ஆவது ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற உள்ள நிலையில்,  ஐபிஎல் தொடரின் தொடக்க விழா 4 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.


இந்நிலையில் இந்தத் தொடக்க விழாவில் நடிகை தமன்னா, ராஷ்மிகா ஆகியோர் கலக்கலான பெர்ஃபாமன்ஸ்கள் அளித்து தங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.


தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் தமன்னா, ராஷ்மிகா இருவருமே சமீபகாலமாக இந்தி சினிமாக்களிலும் கோலோச்சி வரும் நிலையில், தற்போது ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் ஆடியுள்ள இவர்களது கலக்கலான நடனம் வரவேற்பைப் பெற்றுள்ளது.






இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து மால டம் டம், மற்றும் பிரபல ஹிட் பாடல்களான ஊ அண்டாவா பாடல்களுக்கு நடிகை தமன்னாவும், ராஷ்மிகா தன் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த சாமி சாமி பாடல், ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆகியவற்றுக்கும் நடனமாடினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளன. 


 






 






இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள 16ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.


அகமதாபாத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரும் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.


இந்தத் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னர், திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் தொடக்க விழா கோலாகலமாக தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல்  தொடக்க விழா நடைபெறவில்லை. புல்வமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்ற 2019ஆம் ஆண்டும் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ற 3 ஆண்டுகளாக தொடக்க விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இயல்புநிலைக்குத் திரும்பி   இன்று பிரமாண்ட ஐபிஎல் தொடக்க விழா நடைபெற்றுள்ளது.