விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பிக் பாஸ் சீசன் 5 சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதனிடையே இசைவாணியும் இன்றைக்கு பிக் பாஸிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது.


ஆரம்பத்திலிருந்தே இசைவாணிக்கும், இமான் அண்ணாச்சிக்கும் முட்டல் மோதல் நீடித்து வந்த நிலையில் இன்று  இசைவாணி வெளியேறும் பட்சத்தில் அது இமான் அண்ணாச்சி இனி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பலமாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் இமான் அண்ணாச்சிக் குறித்தும், பிக் பாஸில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பது குறித்தும் அவரது சகோதர் செல்வகுமார் மற்றும் மகளை தொடர்புகொண்டு பேசினோம். 


பிக்பாஸில் மீண்டும் அபிஷேக் நுழைந்து விட்டாரே? 


ஆமாம். அன்றைய தினம் இமான் அண்ணாச்சி அந்த பெட்டியை திறந்தபோது அதிலிருந்து திடிரென அபிஷேக் வந்தார். அண்ணாச்சி அதிர்ச்சி அடைந்தது போலவே எங்கள் குடும்பத்தினரும் அதிர்ச்சிக்குள்ளானோம். ஆனால் அபிஷேக்கின் வருகை அண்ணாச்சியின் கேமில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதை அண்ணாச்சியே பிக்பாஸில் சொல்லியிருந்தார். 


இசைவாணி வெளியேறிவிடுவார் என சொல்லப்படுகிறது.. அப்படி நடந்தால் அது இமான் அண்ணாச்சிற்கு பலமாக இருக்குமே? 


உண்மையில் எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அண்ணாச்சியை இசைவாணி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார். இசைவாணி இன்னும் கொஞ்ச நாள் பிக் பாஸில் இருந்தால், அவர் இமான் அண்ணாச்சியை இன்னும் நன்றாக புரிந்து கொள்வார் என்று நாங்கள் நினைக்கிறோம்.


போட்டிகள் கடுமையாகிக் கொண்டிருக்கிறதே.. அண்ணாச்சி தாக்குப்பிடிபாரா?


கொஞ்சம் பொறுங்கள்.. நூறு நாள் ஆட வேண்டுமில்லையா.. இனி அண்ணாச்சி ஆட்டம் ஆரம்பமாகும்..