Just In





சிம்பொனி அரங்கேற்றிய பின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு விசிட் அடித்து மனம் உருகி வேண்டிய இளையராஜா!
முதல் முறையாக சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றிய பிறகு நாடு திரும்பிய இளையராஜா திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

மார்ச் 8-ஆம் தேதி, இசை மேதை இளையராஜா லண்டனில் உள்ள அப்பல்லோவில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலமாக ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா நிகழ்த்தினார். இதற்கு இளையராஜாவிற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்து வாழ்த்து குவிந்தது. இதையடுத்து நாடு திரும்பிய இளையராஜாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை சாகசத்தை தமிழக அரசு நினைவுகூரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பின்னர் அடுத்தடுத்து பல பிரபலங்கள் இவரை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பிரதமர் மோடியை டெல்லிக்கு சென்று சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்று இளையராஜா வெளியிட்ட நிலையில் அது வைரலாக பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இளையராஜா தமிழகத்தில், கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலுக்கு சென்ற இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உளது. ராகு தோஷத்தை நீக்க கூடிய சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கக் கூடிய இந்த கோயிலுக்கு வருகை புரிந்த இளையராஜா, கோயிலின் தென் மேற்கு மூலையில் உள்ள நாகவள்ளி, நாக கன்னியுடன் இருக்கும் ராகு பகவானை வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து ராகு கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியிலுள்ள தென்காளஹஸ்தி என்று சொல்லப்படும் பாம்புரநாதா கோயிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டுள்ளார். சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா கோயிலுக்கு வருவதை அறிந்த பக்தர்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளனர். மேலும், ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.