தமிழ்நாடு அரசு சார்பாக இசைஞானி இளையராஜாவுக்கு கடந்த சில நாட்கள் முன்பு பாராட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டது. தனது 82 ஆவது வயதில் இளையராஜா தனது முதல் சிம்பனியை உருவாக்கியதை பலரும் இந்த விழாவில் பாராட்டினர். தற்போது தனது பேரன் இசையில் உருவான பாடலை இளையராஜா பாடியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது
குடும்பத்தைப் பற்றி இளையராஜா
இளையராஜாவின் பாராட்டு விழாவில் தனது குடும்பத்தைப் பற்றி இளையராஜா பேசியது பலரை கவர்ந்தது. " இந்த சிம்பனியை எழுத என் குழந்தைகளுடன் கூட நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரம் செலவிட்டிருந்தால் இந்த சிம்பனியை எழுதி முடித்திருக்க முடியாது. இது மட்டுமில்லை நான் இசையமைத்த எந்த பாடலையும் நீங்கள் கேட்டிருக்க முடியாது. அதனால் இந்த பாராட்டு விழாவில் நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடைய குழந்தைகள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தான். உங்களுடன் செலவழிக்காத நேரம் தான் இந்த சிம்பனியாக மாறியிருக்கிறது என்பதில் நீங்கள் பெருமை கொள்ளலாம். நான் உங்களுடன் நேரம் செலவழிக்கவில்லை என்று இனி நீங்கள் புகார் சொல்ல மாட்டீர்கள். ஏனால் உங்களுடைய குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்" என இளையராஜா பேசினார்.
பேரன் இசையமைத்த பாடலை பாடிய இளையராஜா
தனது மகள் பவதாரிணியின் இறப்புக்குப் பின் இளையராஜா தனது குடும்பத்துடன் அதிகப்படியான நேரம் செலவிட்டு வருகிறார். மகன்களுடன் மட்டுமில்லாமல் தனது பேரனுடனும் நேரம் செலவிடுகிறார். இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீர்வர் இசையமைத்த பாடலை இளையராஜா பாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ரெக்கார்டிங்கில் சிங்கம் போல் கம்பீரமாக இருக்கும் இளையராஜா தனது பேரன் முன்னாள் குழந்தை போல் ஜாலியாக பாடலை பாடியுள்ளது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
