மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


 கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி  ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் இல்லை என்பதை இன்னும் பலராலும் ஏற்றுக்கொள்ளாத முடியாததாகவே உள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்து அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தினமும் பொதுமக்களும் , இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் வெறிச்சோடி காணப்படும் தேமுதிக அலுவலகம் விஜயகாந்த் மீதான் அன்பால் கூடிய மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 






இந்நிலையில் தான் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்த் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்த ஒருவார காலமாக நினைத்து கொண்டிருந்தேன். விஜயகாந்த் மறைந்த அன்றைக்கு எங்க ஊரில் நல்ல மழை பெய்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைக்கு வந்தேன். விஜயகாந்த் ஐயா உயிரோடு இருந்தபோது அவரை பார்க்க ஆசைப்பட்டு வாடகை காரில் வீடு வரை வந்தேன். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. விஜயகாந்த் போல பசியோடு இருப்பவர்களுக்கு முடிந்தவரை சாப்பாடு போடுங்கள். முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். அவரது மறைவு ரொம்ப சங்கடமா இருக்கு. 


மேலும்  விஜயகாந்த நடித்த சின்ன கவுண்டர், வானத்தைப் போல படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிறகு கேப்டன் மறைவுக்கு தான் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டவன் என்பதால் தானம், தர்மம் செய்பவர்களை மிகவும் மதிப்பேன். விஜயகாந்த் மறுபிறவி எடுத்து இதேபோல் செய்வார் என நம்புகிறேன். நானும் அவர் வழியில் உதவிகளை செய்வேன்” என தெரிவித்தார்.  




மேலும் படிக்க: Jayam Ravi: “நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் தான் சரி” - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ஜெயம் ரவி பேச்சு