தமிழ் சினிமா விமர்சகர்களில் மிகவும் முக்கியமான நபராக இருப்பது ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இவர் சமீபத்தில் வெளியான படமான பம்பர் படம் குறித்த விமர்சனத்தை வழக்கம்போல் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்படத்தில் வெற்றி, பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நராயணன் ஆகியோருடன் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜி.பி. முத்துவும் நடித்திருந்தார். 


இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தனது விமர்சனத்தில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் பட உருவாக்கம், படத்தில் நடித்தவர்கள் குறித்து சிறப்பான விமர்சனத்தை அளித்திருந்தார். இப்படம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. 


இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனத்தில் படம் நல்லா இருக்கு, ஆனால் படத்தில் தேவையில்லாமல் ஒரு பன்னி மூக்கை விட்டு போகிறது எனவும் அந்த பன்னியை முதலே அடித்து கொன்றிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக ஜி.பி. முத்துவின் கதாப்பாத்திரத்தைத்தான் இப்படி கூறுகிறார் என சமூகவலைதளத்தில் பேச்சுகள் அடிபட்டது. 






இதுகுறித்து தெரிந்துகொண்ட ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறனுக்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், “ ப்ளூ சட்டை மாறன் பம்பர் படம் குறித்து தெரிவித்துள்ள விமர்சனத்தில் படம் நன்றாக இருக்கிறது என தெரிவித்துவிட்டு, படத்தில் ஒரு பன்றி வருகிறது, அந்த பன்றியை அடித்து கொலை செய்திருக்க வேண்டும் என எனது கதாப்பாத்திரத்தை குறித்து கூறியுள்ளார். பன்றி அமைதியாகச் செல்லும், அதனை சீண்டினால் பன்றி கடித்துக் குதறிவிடும். பன்றி கடித்தால் எதுவும் மிச்சம் இருக்காது” என பொருள்படும் வகையில் கூறியிருந்தார். 


இதற்கு ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் பலர் கமெண்ட்களில் முத்துவிற்கு ஆதரவான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் மிகவும் தகாத வார்த்தைகளைக் கொண்டு ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதேநேரத்தில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் தகாத வகையில் இருப்பதாக பலரும்  ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்ப்பதும் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.