பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் ஃபதே அலிகான் தனது ஊழியரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பாகிஸ்தான் நாட்டின் பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். இவரது இனிமையான குரலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள ரஹத் கவ்வாலி பாடகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் இருந்து மெகா தொடர்களுக்கும் இவர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படியான ரஹத் ஃபதே அலிகான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


அவர் தன்னுடைய வீட்டில் பணியாள் ஒருவரை கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஒரு இடத்தில் சுற்றி பலரும் நிற்கும் நிலையில் ரஹத் ஃபதே அலிகான் அந்த நபரை சரமாரியாக அடிப்பதோடு, கன்னத்தில் அறைவதும், காலணியை கொண்டு அந்த பணியாளின் தலையிலும் உடலிலும் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிவாங்கும் நபர் தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் நிலையில் ரஹத் அந்த நபரை விடாமல் அடிக்கிறார். 


இசைத்துறையில் பெயர் பெற்ற ஒருவர் தனது ஊழியர் மீது கொடூர தாக்குதல் நடத்தியதுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது மனிதநேயம் மீறிய செயல் என்றும், மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தங்கல் எதிர்ப்பை பதிவு செய்தன. இதனிடையே முதலில் அந்த ஊழியர் மதுபானம் எடுத்து வரவில்லை என ரஹத் ஃபதே அலிகான் அடித்ததாக சொல்லப்பட்டது. 






ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், மதகுரு ஒருவர் கொடுக்கப்பட்ட மந்திரங்கள் உச்சரிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய பாட்டிலை கொண்டு வர சொன்னேன் என தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னதான் இருந்தாலும் இப்படியா வன்முறையை கட்டவிழ்க்க வேண்டும்? .. சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நபரான நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்காமல் இப்படி அடிமை மாதிரி ஊழியர்களை நடத்தலாமா என அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை இணையவாசிகள் வெளிப்படுத்தியுள்ளனர். 


ஊழியர்கள் நலனுக்கு என்னதான் அனைத்து நாடுகளும் விதவிதமான தண்டனைகளுடன் சட்டங்களை இயற்றினாலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Crime: ஊர், ஊராக சென்று பாலியல் தொழில்.. போதையில் சிக்கிய தம்பதியினர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!