மலேசியாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. 


1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது 16வது வயதில் அறிமுகமான யுவன் சங்கர் ராஜா இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.  இடையில் இசைக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு தயாரிப்பாளராகவும் களமிறங்கிய யுவன் மீண்டும் இசையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். தொடர்ந்து  சமீபத்தில் அவர் இசையில் குருதியாட்டம், விருமன் ஆகிய படங்கள் வெளியானது. 


இதனைத் தொடர்ந்து காஃபி வித் காதல், ஏஜென்ட் கண்ணாயிரம், பரம்பொருள்,லவ் டுடே, ராம் - நிவின் பாலி இணையும் படம் என மீண்டும் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக யுவன் மாறியுள்ளார். இதனிடையே இசை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை சந்திக்கும் யுவனின் நிகழ்ச்சி  ஒன்று சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. 






இந்த இசை நிகழ்ச்சி திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.அவர் மீதும், அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை என்பதற்கு சான்றாக இந்த  இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் மலேசியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். இதேபோல் மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன்  மட்டும் தான் என்பதால் இது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


மலேசியாவில் கிடைத்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு யுவன் ஷங்கர் ராஜாவை பலரும் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. 


இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு 'யு & ஐ' என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 10 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பு வெளியானது முதல் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் ரசிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.