சன் டிவியில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் எதிர்நீச்சல். சீரியல் தொடங்கிய நாள் முதல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் கடந்த சனிக்கிழமையுடன்  நிறைவு பெற்றது. இந்த சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் ஏற்கெனவே சன் டிவியின் ஆல் டைம் ஃபேவரட் சீரியலான 'மெட்டி ஒலி' சீரியலை இயக்கியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அவரின் வீட்டில் மங்களகரமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.  


 



கோலங்கள் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இயக்குநராகவும் நடிகராகவும் பரிச்சயமான திருச்செல்வம், பெண்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரின் கதைக்களம் பொதுவாகவே பெண்களின் முன்னேற்றம், பெண் அடிமை, ஆண் ஆதிக்கத்தை எதிர்ப்பது இப்படி ஏதாவது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கதைக்களத்தை அமைத்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். 


டி.ஆர்.பி வரிசையில் முன்னணி இடத்தை பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலை திடீரென முடித்தது சின்னத்திரை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விரைவில் மீண்டும் உங்களை சந்திப்போம் எனத் தெரிவித்திருந்தார் திருச்செல்வம். 


 



 


சீரியலை முடித்த கையோடு மகளுக்கு திருமணத்தை ஏற்பாடு செய்துவிட்டார் இயக்குநர் திருச்செல்வம். அவரின் மகள் பிரியதர்ஷினிக்கும் ஹரிகுமாருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஒட்டுமொத்த எதிர்நீச்சல் டீமும் அவரின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.


எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடித்த ஹரிப்ரியாவும், ரேணுகாவாக நடித்த பிரியதர்ஷினியும், திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஹரிப்ரியாவின் இந்த போஸ்ட் மூலம் ரசிகர்களும் மணமக்களை வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளனர். 


 







முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அசார் கலந்து கொண்ட வீடியோவும் வெளியாகி வைரலாகியுள்ளது.