பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். 


மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதனை போக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் நாளை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. 


கடலூர் மாவட்டத்தில் சூர்யா நடிப்பில் நாளை வெளியாகயுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தநிலையில், பாமகவை சேர்ந்த அருள்ரத்தினம் என்பவர் தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு : 


எச்சரிக்கை: "போராட்டம் வேண்டாம்; புறக்கணிப்பு போதும்!"


நமது போராட்டம், எதிரிகளுக்கான விளம்பரம் ஆகிவிடக் கூடாது. நல்ல விளம்பரம், கெட்ட விளம்பரம் என்பதெல்லாம் சினிமாவுக்கோ, அரசியலுக்கோ இல்லை. எல்லா விளம்பரங்களும் பயனளிக்கும் விளம்பரங்கள் தான்.


உண்மையில் நேரடி விளம்பரங்களை விட, மறைமுக விளம்பரங்கள் தான் அதிகம் பயனளிப்பவை ஆகும். விளம்பர மொழியில் இதனை Earned media என்று அழைக்கிறார்கள் (Earned media is publicity gained from methods other than paid advertising).


நடிகர் சூர்யாவின் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால், அதனை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி, படத்துக்கு இலவச விளம்பரமாக மாற்றுவார்கள். அதைத்தான் நமது எதிரிகள் எல்லோரும் விரும்புகிறார்கள்.


சூர்யா என்கிற நபர் வன்னியர் அடையாளத்தை இழிவு செய்த போது, அதனை வன்மையாக எதிர்த்தோம். கண்டனத்தை பதிவு செய்தோம். ஆனால், அதையே அவரது புதிய படத்துக்கும் செய்தால் - அது அந்தப் படத்துக்கான விளம்பரமாக மட்டுமே இருக்கும்.


"கோபத்தை வெளிப்படுத்த என்ன செய்யலாம்?"


1. முதலில் நீங்கள் இந்தப் படத்தை 'பணம் செலவிட்டு' பார்க்காதீர்கள். 


2. இந்தப் படத்துக்கு எதிராக போராட்டம் எதையும் நடத்தாதீர். அவ்வாறான போராட்டத்தில் பங்கேற்காதீர்.


3. முகநூல், டிவிட்டர், யூடியூப் போன்றவற்றில் இந்தப் படத்தைப் பற்றி எந்தக் கருத்தையும் பதிவு செய்யாதீர்.


4. பெரும்பாலும் வன்னியர்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்ஆப் குழுக்களில் - உங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் உள்ள வாட்ஸ்ஆப் குழுக்களில் - வன்னியர்களின் அக்னி கலசத்தை இழிவு செய்த நடிகர் சூர்யாவின் படத்தை பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.


5. படம் வெளியான பின்னர் - சூர்யாவின் படம் மாபெரும் வெற்றி, பலகோடி வசூல், என்றெல்லாம் கட்டமைக்கப்படும் கட்டுக்கதை செய்திகளைக் கண்டுகொள்ளாதீர்.


ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் குமார், விஜய் போன்றவர்கள் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பலகோடி வசூல் செய்யும் ஆற்றலும் உள்ளவர்கள். ஆனால், நடிகர் சூர்யா ஒரு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் அல்ல. அண்மைக் காலங்களில் அவரது படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. 


எனவே, சூர்யா நடித்த படங்களை நாம் பார்க்காமல் புறக்கணிப்பதும், நமது நண்பர்கள், உறவினர்கள் அவரது படங்களை பார்க்காமல் புறக்கணிக்க செய்வதுமே சரியான, போதுமான எதிர்ப்பு ஆகும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண