ஒரு தொகுப்பாளினியாக இருந்து ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹரிப்ரியா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நந்தினியாக சிறப்பாக நடித்து கொண்டு இருக்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் பாசிட்டிவாக பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். 


 



பி.எஸ்சி சைக்காலஜி பட்டதாரியான ஹரிப்ரியா விஸ்காம் டிப்ளமோ மற்றும் எம்.ஏ. டான்ஸ் பட்டப்படிப்பையும் முடித்தவர். இத்தனை திறமைகளை கொண்டு இருந்தாலும் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் படித்த சைக்காலஜி மூலம் தனது நட்பு வட்டாரத்திற்கு இலவசமாகவே கவுன்சலிங் கொடுத்து வருகிறாராம். மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்க முயற்சிக்கும் ஹரிப்ரியா தனக்கு ஏதாவது ஒன்று கவலை கொடுப்பதாக இருந்தால் உடனே அதை ஒரு பேப்பரில் எழுதி கிழித்து விடுவாராம். இது தான் அவருடைய ஸ்டைல். என்னுடைய அம்மா எனக்கு எப்பவுமே சப்போர்ட்டாக இருப்பார். என்னை விடவும் எனக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவர் என் அம்மா தான் என கூறியுள்ளார். 


வாழ்க்கையில் ஏற்றம் இரக்கம் என்பது எப்போதுமே வந்து போவது தான். வெறும் ஏற்றம் மட்டுமே இருந்தால் வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் இருக்காது, நம்மால் பக்குவ பட முடியாது. பிரச்சனை என்பது  வாழ்க்கையில் வரும் ஒரு சேப்டர் தான். அதற்கு கவலை படுவது உண்டு ஆனால் அதற்காக  என்னடா இந்த வாழ்க்கை என நொந்து கொள்பவள் நானல்ல. மீடியாவை பொறுத்தவரையில் இங்கு நிரந்தமான நண்பர்களும் கிடையாது நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. இதை தான் நான் என் அனுபவத்தின் மூலம் மீடியாவில் இருந்து கற்றுக்கொண்டது. உலகில் உள்ள அனைவருக்குமே  வாழ்க்கையில் ஏதாவது சறுக்கல்கள் ஏற்படும். அதுவே மீடியாவில் உள்ளவர்கள் என்றால் அது வெளிச்சம் போட்டு காட்டப்படும். அது பரவாயில்லை. மீடியாவில் என்னுடைய ஆரம்பகாலக் கட்டத்தில் ஒரு சில விஷயங்கள் என்னை பாதித்தது நிறைய மன வேதனையை கொடுத்தது. ஒரு கட்டத்திற்கு பிறகு போகட்டும் இதனால் என்ன ஆகிவிட போகுது என்ற மனநிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடைய அனுபவத்தால் நான் அதை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக்கொண்டேன்.


 



வாழ்க்கையில் பாசிட்டிவ் நெகடிவ் இரண்டுமே இருக்கும். எதிர்காலத்திலும் நான் பிரச்சனைகளை சமாளிக்கத்தான் வேண்டி இருக்கும். என்ன வரும் எப்படி வரும் என்பதை கணிக்க முடியாது. அதனால் எப்பவுமே நான் அதற்கு ரெடியாகவே இருக்க வேண்டும். நெகடிவ் விஷயங்கள் தான் நம்மை பதப்படுத்தும், பக்குவமாக்கும். எப்பவுமே சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என எதுவும் இல்லை. நமது எமோஷனை வெளிக்காட்டுவதற்காக தானே கடவுள் ஆறாவது அறிவை கொடுத்துள்ளார். வாழ்க்கையின் போக்கில் இதை கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டது தான். 


இன்று சோசியல் மீடியாவில் நல்லது கெட்டது இரண்டுமே வேகமாக பரவி விடுகிறது. அதில் நல்லதை மட்டுமே நான் எடுத்து கொள்கிறேன். என்னுடைய கேரியர் சார்ந்து யாரவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு நன்றி. அது தான் என்னை மேலும் மெருகேற்ற உதவும். அதை தவிர எனது பர்சனல் வாழ்க்கை குறித்த விமர்சனங்களை நான் கண்டுகொள்ளவே மாட்டேன். முகம் தெரியாத அந்த நாலு பேருக்காக நான் என் வருத்தப்பட வேண்டும். அவர்களின் ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு நாம் பதிலளிக்க தேவையில்லை . பதில் அளித்தால் நாம் முட்டாள்களாக ஆகிவிடுவோம். இப்படி தனது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பல நெகடிவ் விஷயங்களை கடந்து மிகவும் தன்னம்பிக்கையுடன் பயணித்து வரும் ஹரிப்ரியா பல பெண்களுக்கும் ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறார்.