ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து வருகிறார். பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுடைய 25வது படமான இதில் ரவி மோகன் அவருக்கு வில்லனாக நடிக்கிறார். என்னை சிவகார்த்திகேயன் அடிப்பது போன்றோ, அசிங்கமாக திட்டுவது போன்றோ காட்சிகள் இருக்கக்கூடாது, கதையில் இருவருக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என பல கன்டிஷன்களுடன் தான் ரவி மோகன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரே தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயனும், ரவி மோகனும் ஹீரோ - வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு இடையே சிவகார்த்திகேயனின் 23வது படமான மதராஸி-யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு அருண் விஜய் வில்லன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து ஹீரோக்களை வில்லனாக மாற்றி வரும் சிவகார்த்திகேயனின் பட்டியலில் மறுபடியும் ஒரு முன்னணி ஹீரோ நடிக்கவிருக்கிறாராம். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018 எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஜூட் ஆண்டனி. வேல்ஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் சிம்பு நடிக்க முடியாமல் போகவே ஆர்யாவை வைத்து நடிக்கவைக்க வேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இயக்குநர் ஜூட் ஆண்டனியின் கதை பிடித்துப் போனதால் ஏஜிஎஸ் நிறுவனம் அதனை தயாரிக்க முன்வந்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயனின் கால்ஷூட் ஏற்கனவே இருப்பதால், அவரை ஹீரோவாக வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும் இயக்குநருக்கு ஆர்யாவை விட்டுக்கொடுக்க மனமில்லாததால், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.