தமிழ் சமூகம் உங்களை ஒரு காலத்திலும் மன்னிக்காது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை நடிகரும், திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட் கடுமையாக சாடியுள்ளார்.
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியானது நிலவியது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகை களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணப் போகிறது என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உறுதியாக எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும், தவெகவுக்கு ஓட்டு போட்ட மக்களை சாடியும் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். நேர்காணல் நடைபெற்ற நிலையில் அவருக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அதேசமயம் சமூக வலைத்தளத்திலும் விஜயை கடுமையாக சாடி வருகிறார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்டோ ஷங்கர் மிகப்பெரிய ஆச்சர்யம்.. அவ்வளவு தவறுகளையும் மீறி அவரே அன்று பேசு பொருளாக இருந்தார்.. மக்கள் அவரையே உற்று நோக்கினர்.. கொலையாளிதான்.. ஆனால் அவரே பேசு பொருளாக இருந்தார்.. அவரை ஆதரித்த ஒரு கூட்டமுண்டு.. அவர் கொலையாளியே ஆனால் காரணம் யார்?? இப்படியும் சில பேர் இருந்தார்கள்.. இவர்கள் யாரென்றால் ஷங்கரால் எந்த பாதிப்பையும் அறியாதவர்கள்.. ஷங்கரின் சமூக பாதிப்பையும் இவர்கள் சமூகத்திற்கு ஒரு advantage ஆக எடுத்துக்கொண்டவர்கள்.. ஒரு முட்டாளின் வருகைக்கு காத்திருப்பவர்கள்.. அறிவு சார்ந்த தமிழ் சமூகத்தின் எதிரிகள்.. கொலைகாரனை கொண்டாடுவதன் மூலமாக தாங்கள் யார் என்று இந்த சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்,, நம்மை போன்றே இருக்கும் “அவர்கள்”.. தமிழ் சமூகம் உங்களை ஒரு காலத்திலும் மன்னிக்காது.. நீங்கள் உருவாக்குங்கள்.. பெரியாரின் பேரன்கள் அவர்களை யார் என்று அடையாளம் காட்டுவார்கள்.. வாழ்க தமிழ்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தேர்தலுக்கு முதல் நாள் வெளியிட்ட பதிவில், “விளையாட்டாக எலெக்சன் வரைக்கும் வந்துட்டாரு விஜய். பல்வேறு பொய்களை சொல்கிறார். நடிக்கிறார்.. கதறுகிரார்.. முட்டி போட்டு வேண்டுகிறார். தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் உங்களுக்கு தக்க தண்டனை தர தயாராக உள்ளனர். காலம் சரியான நேரத்தில் உங்களை மக்கள் முன் குற்றவாளியாக நிறுத்தும்.. தயாராக இருங்கள். மே4 க்கு பிறகு 41 அப்பாவி உயிகள் உங்களுக்கு முறையான தண்டனையை வழங்கும்.. அதற்கு தமிழகம் காத்திருக்கிறது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
