காதுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு நடிகர் அஜித்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் ட்வீட் செய்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் கடைசியாக  ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில்   நடித்து வருகிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பு அஜித் விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.






ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிக்கும் அஜித் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்குவார். அந்த வகையில் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்  “உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித்” என குறிப்பிட்டு ஒரு புகைப்படம் இடம் பெற்றது. 


அந்த புகைப்படத்தில் டின்னிடஸ் எனப்படும் காதுகளில் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கத்திலும் ஏற்படும் வித்தியாசமான சத்தம் குறித்த தகவல் இடம் பெற்றது. இப்படி கேட்கும் சத்தம் வெளிப்புற ஒலியால் ஏற்படாது. இதனால் அருகிலிருப்பவர்களால் அதைக் கேட்க முடியாது. இது ஒரு பொதுவான பிரச்சனை என்ற போதிலும் 15% முதல் 20% மக்களை பாதிக்கிறது.குறிப்பாக வயதானவர்களை இது அதிகம் தாக்குகிறது. காது கேளாமை அல்லது தலைச்சுற்றல், காதில் மெழுகு அளவுக்கு அதிகமாக வெளிப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 






இதுதொடர்பாக சுரேஷ் சந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னிடம் அஜித் இந்த பாதிப்பு குறித்து தகவலை சொன்னதாகவும், இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதால் இத்தகைய பதிவை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சுரேஷ் சந்திராவின் பதிவை சுட்டிக் காட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஒலி மாசுபாடு என்பது சுற்றுச்சூழலில் இயல்பாக ஒருக்கும் ஒலியை சீர்குலைக்கும் தேவையற்ற ஒலிகள் என்றும், பணிச்சூழலில் கவனமாகவும் இருப்போம். தேவையற்ற சத்தத்தைத் தவிர்ப்போம் என தெரிவித்துள்ளார். 


அதேசமயம் படப்பிடிப்புகளில் வெடிபொருட்கள், மைக்ரோபோன்ஸ் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சாதனங்களின் பயன்பாடு குறைக்கப்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் 62வது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.